அமீரகத்தில் நாளையுடன் முடிவடையும் தொழிலாளர்களுக்கான மதிய நேர ஓய்வு இடைவேளை..!!
கோடைகாலத்தில் திறந்த வெளி மற்றும் நேரடியாக சூரியனுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்பட்ட மதிய ஓய்வு இடைவேளை செப்டம்பர் 15 உடன் முடிவடைவதாக அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) அறிவித்துள்ளது.
இந்த மதிய நேர ஓய்வு இடைவேளை கடந்த ஜூன் மாதம் 15 ம் தேதி முதல் மதியம் 12.30 தொடங்கி 3.00 மணி வரையிலும் நடைமுறையில் இருந்து வருகிறது.
கட்டாய வருடாந்திர மதிய இடைவேளையனது நேரடி சூரிய ஒளியின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களின் நல்வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதையும் கோடை காலங்களில் வெயிலின் கொடுமையில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் , பின்பற்ற வேண்டிய பல விதிகள் மற்றும் நடைமுறைகளை MoHRE வெளியிட்டு அதன் கூட்டாளர்களின் ஒத்துழைப்புடன் பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.
மேலும் தொழில்நுட்ப காரணங்களுக்காக தொடர வேண்டிய பணிகளைக் கொண்டிருக்கும் பொறுப்பான நிறுவனங்களுக்கு இந்த தடை பொருந்தாது என்றும் கூறப்பட்டது. விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், பொது பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தின் தேவைகளுக்கு ஏற்பவும், எலுமிச்சை, உப்பு, குளிர்ந்த நீர் மற்றும் இது போன்ற தாகம் தீர்க்கும் பொருட்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.