ஓமான்: செப்டம்பர் இறுதிக்குள் ஊழியர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்..!!
அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முழுமையாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போட வேண்டும் என்று ஓமானின் அரசு தகவல் தொடர்பு மையம் (GC) தெரிவித்துள்ளது.
இதேபோல், இந்த நிறுவனங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களும் பார்வையாளர்களும் அக்டோபர் 14 வரை தடுப்பூசி முழுமையாகப் போடவில்லையென்றாலும் அனுமதி வழங்கப்படும் என்றும் அக்டோபர் 14 க்குப் பிறகு அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
GC வெளியிட்ட ஒரு அறிக்கையில், “ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் முழுமையாக தடுப்பூசி போட கடைசி நாள் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது”.
“தடுப்பூசிக்கான ஒரு டோஸ் மட்டும் போடப்பட்ட வாடிக்கையாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து பயனர்களுக்கு, அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்குள் நுழைய அக்டோபர் 14, 2021 வரை காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 1 முதல், ஓமானில் உள்ள உணவகங்கள், ஹோட்டல்கள், கடைகள் மற்றும் மால்கள் போன்ற பொது இடங்களுக்குள் நுழைய, இந்த இடங்களில் உள்ள ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.
சுகாதார அமைச்சின் Tarassud COVID-19 கண்காணிப்பு அப்ளிகேஷன் தகவல்களின் அடிப்படையில், ஓமானில் செப்டம்பர் 2 வியாழக்கிழமை நிலவரப்படி, கிட்டத்தட்ட 1.4 மில்லியன் மக்களில் 31 சதவீதம் பேர், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரையிலும் சுமார் நான்கு மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.