குறிப்பிட்ட சில விசாக்களின் செல்லுபடி காலத்தை நவம்பர் வரை நீட்டித்த சவூதி அரேபியா..!!
கொரோனா நோய்த்தொற்று காரணமாக சவூதி திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் சவூதி குடியிருப்பாளர்களின் ரெசிடென்ஸ் விசாக்கள் (இகாமா), விசிட் விசாக்கள் மற்றும் எக்ஸிட் & ரீ-என்ட்ரி விசாக்களின் செல்லுபடி காலம், கட்டணம் ஏதும் செலுத்தாமலே நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படும் என்று சவூதி அரேபிய அரசு நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 10) அறிவித்துள்ளது.
சவூதி அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் நவம்பர் 30 வரை கட்டணம் ஏதும் இல்லாமல் இகாமா, விசிட் விசாக்கள் மற்றும் எக்ஸிட் & ரீ-என்ட்ரி விசாக்களின்செல்லுபடியை பாஸ்போர்ட்டுகளின் பொது இயக்குநரகம் தானாகவே நீட்டிக்கத் தொடங்கியுள்ளதாக சவுதி அரேபிய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த இலவச விசா செல்லுபடி நீட்டிப்பு, கோவிட் -19 காரணமாக சவுதி அரேபியாவிற்கு நுழைவு இடைநிறுத்தப்பட்ட நாடுகளில் சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்களுக்கு பொருந்தும் என்றும், அதே போன்று விசிட் விசா பெற்று நுழைவு தடை காரணமாக சவூதி வரமுடியாமல் இருக்கும் பார்வையாளர்களுக்கும் பொருந்தும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் நிதி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இந்த இலவச நீட்டிப்பு, கோவிட் -19 தொற்றுநோயின் விளைவுகள் மற்றும் பின்விளைவுகளைச் சமாளிக்க அரசி மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது, பாஸ்போர்ட் துறைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி தேசிய தகவல் மையத்தின் ஒத்துழைப்புடன், பாஸ்போர்ட்டின் பொது இயக்குநரகத்தால் தானாகவே மேற்கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.