துபாய் மெட்ரோ நிலையங்களில் சமூக இடைவெளி ஸ்டிக்கர்களை நீக்கிய அரசு..!! தொடர்ந்து குறைந்து வரும் நோய்த்தொற்றின் எதிரொலி..!!
கொரோனா பாதிப்பு ஆரம்பித்ததைத் தொடர்ந்து கடந்த ஓராண்டிற்கும் மேலாக பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்காக அமீரகத்தில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சமீப காலமாக அமீரகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்றால் சில முக்கிய பொது இடங்களில் முக கவசம் தேவையில்லை என அரசு அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது துபாயின் பொதுப் போக்குவரத்து இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்காக ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை அதிகாரிகள் நீக்கியுள்ளனர்.
குடியிருப்பாளர்கள் மற்றும் வழக்கமான பயணிகள் மெட்ரோ மற்றும் மெட்ரோ நிலையங்களில் உள்ள சமூக இடைவெளி ஸ்டிக்கர்களை அகற்றுவதற்கான சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) இந்த நடவடிக்கையை வரவேற்பதாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது துபாயில் கொரோனா முழுமையாக ஒழிவதற்கான சாதகமான அறிகுறி எனவும் சிலர் கூறி வருகின்றனர்.
மேலும் இந்த மாத தொடக்கத்தில், RTA “துபாயில் பொது பேருந்துகளில் அனுமதிக்கப்படும் பயணிகளின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளது.
“துபாயில் பொதுப் போக்குவரத்து முறைகளில் பயணிகளின் திறனை அதிகரிக்க தற்போது ஆய்வுகள் நடந்து வருகின்றன. அரசாங்கம் கொரோனா விதிகளை தளர்த்தியதால், RTA துபாய் முழுவதும் பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பரிசீலித்து வருகிறது” எனவும் RTA கூறியுள்ளது.
அக்டோபர் 1 ஆம் தேதி திறக்கப்பட இருக்கும் எக்ஸ்போ 2020 துபாய்க்கு பேருந்து சேவைகளுக்கான தேவை அதிகரிப்பு மற்றும் அதிகளவில் மக்களுக்கு போக்குவரத்து விருப்பங்களை வழங்குவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.