எக்ஸ்போ 2020 துபாய்: பார்வையாளர்களுக்கு பிரத்யேகமான சிறப்பு பாஸ்போர்ட் அறிமுகம்..!!
எக்ஸ்போ 2020 துபாயில் பங்கேற்கும் 200 க்கும் மேற்பட்ட பெவிலியன்களை பார்வையிடவிருக்கும் துபாய் குடியிருப்பாளர்கள் மற்றும் சர்வதேச பார்வையாளர்கள் ஒரு நினைவுச்சின்னமாக ஒரு சிறப்பு பாஸ்போர்ட்டைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்ட்ரீலில் 1967 ம் ஆண்டு நடைபெற்ற உலக கண்காட்சியில் எக்ஸ்போவிற்கென சிறப்பு பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பாஸ்போர்ட் அவர்கள் பார்வையிடும் அனைத்து சர்வதேச பெவிலியன்களையும் கண்காணிக்க விரும்பும் பார்வையாளர்களுக்கான மிகவும் பிரபலமான எக்ஸ்போ நினைவுப் பொருட்களில் ஒன்றாக மாறி, ஒவ்வொரு பெவிலியனுக்கான ஸ்டாம்பையும் ஒரு நினைவுச்சின்னமாக சேகரிக்க உதவுகிறது.
தற்பொழுது அமீரகத்தில் எக்ஸ்போவிற்காக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிறத்திலான இந்த பாஸ்போர்ட் 50 பக்கங்களைக் கொண்டுள்ளது. இது ஒரு தனித்துவமான எண், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், தனிப்பட்ட விவரங்கள் மற்றும் மறைக்கப்பட்ட வாட்டர்மார்க் படங்களை அதன் ஒவ்வொரு பக்கத்திலும் சேர்க்கிறது.
ஐக்கிய அரபு அமீரகம் தற்போது அதன் பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் நிலையில், இந்த பாஸ்போர்ட் அமீரகத்தை உருவாக்கிய மாண்புமிகு ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் தங்கப் படலத்தில் முத்திரையிடப்பட்ட ஒரு சிறப்புப் பக்கத்தையும், 1971 ஆம் ஆண்டு அமீரகம் உருவான ஆண்டைக் குறிக்கும் ஒரு புகைப்படத்தையும் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி, எக்ஸ்போவிற்கு வருபவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் 50 வது ஆண்டு நினைவாக ஒரு பிரத்யேக ஸ்டாம்பை இந்த பாஸ்போர்ட்டில் பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
20 திர்ஹமிற்கு விற்கப்படும் இந்த எக்ஸ்போ 2020 துபாயிற்கான சிறப்பு பாஸ்போர்ட்டை துபாய் எக்ஸ்போ சைட் முழுவதும் அமைந்துள்ள அனைத்து அதிகாரப்பூர்வ எக்ஸ்போ 2020 துபாய் கடைகள், துபாய் விமான நிலைய டெர்மினல் 3 இல் அமைந்துள்ள எக்ஸ்போ 2020 துபாய் கடை மற்றும் எக்ஸ்போவின் இணையதளத்தில் இருந்து வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் 182 நாள் நடைபெறவிருக்கும் எக்ஸ்போ நிகழ்வு அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 31, 2022 அன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், 191 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.