வளைகுடா செய்திகள்

ஓமான்: மதம், சமூகம், கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு தளர்வுகளை அறிவித்த உச்ச குழு..!! வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கும் அனுமதி..!!

கொரோனா பரவலை தொடர்ந்து ஓமானில் வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடை அமலில் இருந்தும் வரும் நிலையில், 2021 செப்டம்பர் இறுதி வரை குறைந்தபட்சம் ஒரு டோஸ் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்ற வழிபாட்டாளர்களுக்காக, வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்கவும் மற்றும் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை நடத்தவும் உச்ச குழு முடிவு செய்துள்ளது.

ஓமானில் கொரோனா நோய்த்தொற்று சதவீதம் குறைந்து வருவதை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக வழிபாட்டு தலங்கள் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வழிபாட்டு தலங்களின் மொத்த திறனில் 50 சதவீத அளவில் மட்டுமே வழிபாட்டாளர்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் உச்ச குழு தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அவற்றை செயல்படுத்துவதை கண்காணிக்கும் பணியை ஓமான் நாட்டின் நன்கொடைகள் மற்றும் மத விவகார அமைச்சகம் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று செப்டம்பர் 2021 இறுதி வரை குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களுக்கு மதம் சார்ந்த, சமூகம் சார்ந்த, கலாச்சார மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள், கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளில் பங்கேற்க அனுமதிக்கவும் உச்ச குழு முடிவு செய்துள்ளது. எனினும் இது போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை நியமிக்கப்பட்ட அரங்குகள் மற்றும் தளங்களின் மொத்த திறனில் 50 சதவீத அளவில் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் உச்ச குழு கூறியுள்ளது.

மேலும் இது போன்ற நிகழ்வுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்துவதை ஒழுங்குபடுத்தும் பணி மற்றும் கண்காணிக்கும் பணியை திறமையான அதிகாரிகள் மேற்கொள்வர் எனவும் கூறப்பட்டுள்ளது.

வழிபாட்டு தலங்கள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வழிபாட்டாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கழுவுதல் மற்றும் முகவசம் அணிதல் போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் உச்ச குழு வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!