UAE: அக்டோபர் 24 முதல் பார்க்கிங் விதிமீறலுக்கான அபராதம் SMS மூலமே அனுப்பப்படும்..!! பேப்பர் டிக்கெட்டை ரத்து செய்த ITC..!!
அபுதாபியில் உள்ள பொதுவான பார்க்கிங் தளங்களில் வாகனங்களை நிறுத்துபவர்கள் இனி விதிமீறலில் ஈடுபட்டால், விதிமீறலுக்கான அபராதம் பேப்பரில் பிரிண்ட் செய்யப்பட்டு வழங்கப்படாமல் வரும் அக்டோபர் 24 ம் தேதி முதல் மின்னணு முறையில் நேரடியாக SMS மூலம் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் அனுப்பப்படும் என்று அபுதாபியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Integrated Transport Centre – ITC) அறிவித்துள்ளது.
அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமை முதல் பார்க்கிங் விதிமீறல்களுக்கான மவாகிஃப்பின் (Mawaqif) பேப்பர் மூலம் வழங்கப்படும் மீறல் அறிவிப்புகளை ரத்து செய்து அவற்றை SMS மூலம் அனுப்பப்பட்ட அபராதமாக மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளது.
தற்பொழுது வரையிலும், அபுதாபியில் பார்க்கிங் விதிமீறல்களில் ஈடுபடும் வாகன உரிமையாளர்களுக்கு அவர்களின் மீறல்கள் தொடர்பான அபராதத்தை மவாகிஃப் இன்ஸ்பெக்டர்கள் பேப்பரில் பிரிண்ட் செய்து அதனை நேரடியாக வாகனத்தின் கண்ணாடி வைப்பருக்கு கீழ் வைத்துவிட்டு செல்வார்கள். ஆனால் தற்போது அதற்கு பதிலாக அவற்றை மின்னணு முறையில் SMS மூலம் மட்டுமே அனுப்புவார்கள். மேலும் அந்த SMS ல் மீறல் தொடர்பான அனைத்து தேவையான விவரங்களும் அடங்கியிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 24 முதல் இந்த புதிய அடைமுறை அமலுக்கு வரவிருப்பதால், பொது மக்கள் தங்கள் தொடர்புத் தகவலில் செல்லுபடியாகும் தொலைபேசி எண் இருப்பதை உறுதி செய்யுமாறு ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் அபராதத்திற்கான இ-டிக்கெட் SMS மூலம் வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள் செலுத்தப்பட்டால், அபராத தொகையில் 25 சதவிகித தள்ளுபடி மூலம் வாகன உரிமையாளர்கள் பயனடைய இந்த நடவடிக்கை உதவும் எனவும் ITC கூறியுள்ளது.
இந்த முயற்சியானது ITC சேவைகளின் டிஜிட்டல் உருமாற்றம் மற்றும் அபுதாபியின் ஸ்மார்ட் சேவைகளின் தளத்தின் விரிவாக்கத்தை ஆதரிக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் அபுதாபியின் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை (Department of Municipalities and Transport – DMT) தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.