ஓமான்: 2 நாள் விடுமுறை.. பொது பேருந்து, ஃபெர்ரி சேவைகள் நிறுத்தம்.. பல்வேறு இடங்களில் முகாம்.. ஷஹீன் புயலை எதிரகொள்ளத் தயாரான நிலையில் அரசு..!!
அரபிக்கடலில் உருவான காற்றழுத்ததாழ்வு நிலையின் காரணமாக தொடர்ந்து தீவிர புயலாக உருவெடுத்தது ஷஹீன். இது ஓமானில் கரையைக் கடக்கவிருப்பதால் பலத்த ஏற்பாடுகள் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொது விடுமுறை
புயல் கரையைக் கடப்பதன் காரணமாக ஓமானில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த விடுமுறையானது தோஃபர் மற்றும் அல் வுஸ்தா கவர்னரேட்டுகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து நிறுத்தம்
ஷஹீன் புயல் காரணமாக பொது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பேருந்து மற்றும் ஃபெர்ரி சேவைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சலாலா சிட்டி பஸ் சேவை மட்டும் கிடைக்கும் என்றும் அதே போல் ஷனா மற்றும் மஸிரா இடையிலான ஃபெர்ரி சேவையும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
மீண்டும் பொது போக்குவரத்து தொடங்கப்படுவதற்கான தகவல்களை mwasalat ன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் காணலாம் என பொதுமக்களுக்கு அறிவிறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி சேவைகள் நிறுத்தம்
நாட்டில் உள்ள அனைத்து தடுப்பூசி மையங்களும் ஞாயிறு முதல் மறு அறிவிப்பு வரும் வரையிலும் மூடப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும் இது தோஃபர் மற்றும் அல் வுஸ்தா கவர்னரேட்டுகளுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாம்கள்
ஷஹீன் புயலின் தாக்கத்தினால் ஓமானின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பாளர்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஏதேனும் அவசர உதவி வேண்டினால் 9999 என்ற எண்ணிற்கு அழைக்குமாறும் அரசு கூறியுள்ளது. மேலும் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் வாகனம் வைத்திருப்போர் அவசர தேவைக்காக தனது வாகனத்தில் பெட்ரோலை முழுதும் நிரப்பி வைத்தி கொள்ளுமாறும் பேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் ஓமான் சுல்தான் அவர்களும் குடியிருப்பாளர்களை பாதுகாக்கும் பொருட்டு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.