UAE: எக்ஸ்போவில் பணியாற்றிய 2 இலட்சம் தொழிலாளர்களின் பெயர்களை கல்வெட்டில் செதுக்கி நினைவுச்சின்னம் அமைத்த அரசு..!!
எக்ஸ்போ 2020 துபாய் குழுவானது எக்ஸ்போ நிகழ்வை உயிர்ப்பிக்க உதவிய தொழிலாளர்களுக்கு மனமார்ந்த நன்றியை காலம் மறக்காத அளவில் செலுத்தியுள்ளது.
உலகம் முழுவதிலுமிருந்து எக்ஸ்போவில் பணிபுரிந்த 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்டாடும் வகையிலும் அவர்களை நினைவு கூறும் பொருட்டும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னம் எக்ஸ்போ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற லண்டனைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் ஆசிப் கான் வடிவமைத்த தொழிலாளர் நினைவுச்சின்னத்தில், ஒவ்வொரு தொழிலாளியின் பெயரும் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்போவின் ஜூபிலி பூங்காவின் முக்கிய நடைபாதையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சரும், எக்ஸ்போ 2020 துபாயின் டைரக்டர் ஜெனரலுமான ரீம் அல் ஹாஷிமி இந்த நினைவுச்சின்னத்தை வெளியிட்டார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில் “200,000 க்கும் அதிகமான தொழிலாளர்களின் நம்பமுடியாத வேலை மற்றும் எக்ஸ்போ 2020 துபாயில் அவர்களின் பங்களிப்பை நாங்கள் மதிக்க விரும்பினோம். இதில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் அறியப்பட வேண்டியவர்கள். அவர்களுடைய மகத்தான முயற்சிகளுக்கு எங்கள் உண்மையான நன்றியுடனும் பாராட்டுதலுடனும் இந்த நினைவுச்சின்னத்தை அமைத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டில் எக்ஸ்போ தளத்தில் வேலை முதன் முதலில் தொடங்கப்பட்டதில் இருந்து, உலகம் முழுவதிலுமிருந்து எடுக்கப்பட்ட 200,000-க்கும் அதிகமான பணியாளர்கள் 240 மில்லியன் வேலை நேரங்களை கடந்து தற்போதைய பிரம்மாண்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.
ஒரு காலத்தில் பாலைவனத்தின் மிகப்பெரிய பரப்பளவை இன்று உலகத் தரம் வாய்ந்த தளமாக மாற்ற உதவிய தொழிலாளர்களுக்கு இது ஒரு சிறந்த நினைவுச்சின்னம் என்பதில் ஐயமில்லை.