UAE: டாக்ஸி டிரைவர், கட்டிட தொழிலாளர், வீட்டு பணியாளர், 18 வயதிற்குட்பட்டோருக்கு எக்ஸ்போ 2020 செல்ல இலவச நுழைவு..!!
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்திற்கு பிறகு உலகளவில் நடைபெறும் மிகவும் பிரமாண்டமான நிகழ்வான எக்ஸ்போ 2020 துபாயின் இரண்டாவது வாரம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், எக்ஸ்போ 2020 அமைப்பானது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல குடியிருப்பாளர்களுக்கு ஆறு மாத காலம் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வை இலவசமாக காணும் விதமாக இலவச நுழைவை அறிவித்துள்ளது.
எக்ஸ்போ 2020 அமைப்பின் சமீபத்திய அறிவிப்பின்படி, 18 வயதிற்குட்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், குழந்தைகளை பராமரிப்பவர்கள், வீட்டுப் பணியாளர்கள், டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் விருந்தோம்பல் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியவர்களுக்கு எக்ஸ்போ 2020 துபாய் செல்ல இலவச நுழைவு வழங்கப்படுகிறது.
குழந்தைகளை பராமரிப்பவர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் இலவச நுழைவை பெறுவது எப்படி..?
குழந்தைகளை பராமரிப்பவர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் எக்ஸ்போ 2020 துபாய் செல்ல முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட்டுகள் வாங்க முடியாது. அவர்கள் நேரடியாக எக்ஸ்போ 2020 தளத்திற்கு சென்று அங்கிருக்கும் நான்கு நுழைவு வாயில்களில் உள்ள டிக்கெட் அலுவலகங்களை அணுகி அவர்கள் குழந்தைகளை பராமரிப்பவர்கள் அல்லது வீட்டுப் பணியாளர்கள் என்பதை நிரூபிக்க சான்றிதழ் அல்லது ரெசிடென்சி விசாவை வழங்க வேண்டும்.
குழந்தைகளை பராமரிப்பவர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் தங்கள் ஸ்பான்சர் குடும்பத்துடன் மட்டும்தான் செல்ல முடியுமா..?
இல்லை, அவர்கள் தங்களின் ஸ்பான்சர் குடும்பத்துடனோ அல்லது தனியாகவோ சென்று எக்ஸ்போ தளத்தைப் பார்வையிடலாம். மேலும் எக்ஸ்போ நடைபெறும் ஆறு மாதங்கள் முழுவதும் வரம்பு இல்லாமல் எத்தனை முறை வேண்டுமாலும் இலவசமாக செல்லலாம். ஆனால் அவர்கள் ஒவ்வொரு முறையும் தளத்திற்குள் நுழைவதற்கு ஒரு புதிய டிக்கெட்டைப் பெற வேண்டும்.
RTA டிரைவர்கள் எக்ஸ்போ தளத்தில் இலவசமாக நுழைய முடியுமா..?
ஆம். சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) பணியமர்த்தப்பட்ட பேருந்து மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள், அவர்கள் பணிபுரிவதற்கான தகுந்த சான்றுகளுடன், தகுந்த அடையாள அட்டை அல்லது தங்களுடைய வேலைவாய்ப்பு நிலையை குறிப்பிடும் ரெசிடென்சி விசா போன்றவற்றுடன் இலவசமாக நுழையலாம். எனினும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே இலவச நுழைவை அவர்கள் பயன்படுத்தலாம்.
விருந்தோம்பல் (Hospitality) துறையில் பணிபுரியும் ஊழியர்கள் இலவச நுழைவை பெற முடியுமா..?
ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் உட்பட விருந்தோம்பல் துறையில் பணிபுரியும் நபர்களுக்கும் இலவச நுழைவு சீட்டை பெற முடியும். ஆனால் இந்த சலுகை அக்டோபர் மாதம் வரை மட்டுமே செல்லுபடியாகும். இலவச நுழைவுச் சீட்டைப் பெற விரும்பும் இவ்வகை பார்வையாளர்கள் டிக்கெட் அலுவலகங்களில் பெற்று கொள்ள முடியும்.
கட்டிட தொழிலாளர்கள் இலவசமாக நுழைவதற்கு தகுதியுள்ளவர்களா..?
ஆம். கட்டிட தொழிலாளர்களுக்காக ஒரு தனித் திட்டம் எக்ஸ்போ 2020 அமைப்பால் தொடங்கப்பட்டுள்ளது. எக்ஸ்போ 2020 தளத்தின் கட்டுமான பணியில் பணிபுரிந்த தொழிலாளர்கள் உட்பட ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் தொழிலாளர்கள் இந்த நிகழ்வின் அனுபவத்தை அனுபவிக்க இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உலகின் மிகப்பெரும் நிகழ்வை தொழிலாளர்கள் முடிந்தவரை அணுகுவதற்கு, எக்ஸ்போ 2020 குழு ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள கட்டுமான நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து 350,000 தொழிலாளர்களை இந்த திட்டத்தின் மூலம் அழைக்கவுள்ளது. தொழிலாளர் ஒருவருக்கு 1 திர்ஹம் என்ற கட்டணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கான நிதி சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் நேரடியாக வழங்கப்படும். மேலும் தொழிலாளர்களுக்கான இந்த இலவச நுழைவு நிறுவன முதலாளிகளால் ஏற்பாடு செய்யப்படும்.
இலவச நுழைவு இல்லாதவர்கள் டிக்கெட்டுகளை எங்கே வாங்குவது..?
18 முதல் 59 வயதுடையவர்களுக்கான ஒரு நாள் டிக்கெட், பல நாள் பாஸ் மற்றும் ஆறு மாத சீசன் பாஸ் அனைத்தையும் எக்ஸ்போ 2020 துபாய் ஆன்லைன் டிக்கெட் அலுவலகத்தில் வாங்கலாம்.
ஒரு நாள் டிக்கெட்டுகள் 95 திர்ஹம் என்றும், பல நாள் பாஸ்களுக்கு 195 திர்ஹம் என்றும் ஆறு மாதங்கள் நீடிக்கும் முழு சீசன் பாஸ் 495 திர்ஹம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பல நாள் சீசன் பாஸ் பயன்பாட்டின் முதல் நாளிலிருந்து தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
மேலும் எக்ஸ்போ தொடங்கியுள்ள இந்த அக்டோபர் மாத சிறப்பு சலுகையாக ஒரு நாள் பாஸிற்கான 95 திர்ஹம் பட்ஜெட் விலையில் அக்டோபர் மாதம் முழிவதும் செல்லும் சிறப்பு மாத பாஸை ஏற்பாட்டாளர்கள் அறிமுகப்படுயிருந்ததும் குறிப்பிடத்தக்கது.