ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றானது மிக குறைவான எண்ணிக்கையிலேயே பதிவாகி வருகிறது.
அமீரக அரசின் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் விளைவாக நோய்த்தொற்றானது மிகவும் குறைந்து ஒரு சில பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என்றும் அரசு அறிவித்துள்ளது.
மேலும் உலகிலேயே அதிகளவு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நாடாகவும் அமீரகம் திகழ்கிறது.
அத்துடன் சிறந்த திட்டமிடலுடன் எக்ஸ்போ 2020 துபாயும் வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து குறைவான எண்ணிக்கையில் நோய்த்தொற்றைப் பதிவு செய்து வரும் அமீரகத்தில் இன்று நோய்த்தொற்றானது 200 க்கும் கீழாக குறைந்துள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 3, 2021) புதிதாக 184 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 736,708 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,102 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய நாளில் மட்டும் 306 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 729,548 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.