ஈரானில் ஞாயிற்றுக்கிழமை இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா மற்றும் அபுதாபியில் வசிப்பவர்கள் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நீடித்த இந்த நில நடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். மக்களின் சொந்த பாதுகாப்பிற்காக பல கட்டிடங்களை விட்டு அவர்கள் வெளியேறியதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) மாலை 4.07 மணியளவில் ஈரானின் தெற்கே தாக்கிய 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் மாலை 4.08 மணிக்கு 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை NCM பதிவு செய்தது. இது அமீரகத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தியது” என NCM கூறியதோடு இதனால் எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஜுமைரா லேக் டவர்ஸ், நஹ்தா, தேரா, பர்ஷா, துபாய் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பார்க் மற்றும் டிஸ்கவரி கார்டன்ஸ் போன்ற பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ராஸ் அல் கைமாவில் உள்ள சில பகுதிகள், ஷார்ஜாவின் அல் நஹ்தா மற்றும் கார்னிச் ஆகிய இடங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
ஒரு ட்விட்டர் பயனர் கூறுகையில் துபாயில் இருக்கும் DIFC-யில் உள்ள தனது கட்டிடம் முழுவதும் அதிர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
பர்ஷா ஹைட்ஸில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சிவம் என்பவர், தனது அலுவலகத்தில் சரவிளக்குகள் நடுங்குவதைக் கண்டதாகக் கூறினார். இது பற்றி தெரிவிக்கையில் “நாங்கள் அதிர்வுகளை உணர்ந்தோம் மற்றும் மேஜையில் இருந்து பொருட்கள் விழுவதைக் கண்டோம். அதனைத் தொடர்ந்து நாங்கள் கட்டிடத்தை விட்டு உடனே வெளியேறினோம்,” என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் அவர் இருந்த முழு கட்டிடமும் 15 நிமிடங்களில் காலி செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.
தேராவில் வசிக்கும் அகமது என்பவர் குடியிருப்பு கட்டிடத்தின் 10வது மாடியில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், “கதவுகள், ஜன்னல்கள் எல்லாம் அதிர்ந்தன. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் நாங்கள் உடனே கட்டிடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான். நாங்கள் படிக்கட்டுகளைப் பயன்படுத்தி வெளியே சென்றோம் ”என்று அவர் கூறியுள்ளார்.
இந்த அதிர்வினை பல குடியிருப்பாளர்கள் தங்களுக்கு தலைச்சுற்றல் இருப்பதாக நினைத்துள்ளனர்.
“என் தலை சுற்றுகிறது என்று நினைத்தேன். வீடு குலுங்குவதை உணர்ந்தீர்களா என்று என் பணிப்பெண் கேட்டபோதுதான், அது நிலநடுக்கம் என்பதை உணர்ந்தேன்” என்கிறார் ஷார்ஜாவின் மஹத்தா பகுதியில் வசிக்கும் அப்துல்லா அலி.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அபுதாபி நகரில் உள்ள சில கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
அபுதாபியின் எலக்ட்ரா ஸ்ட்ரீட்டில் வசிக்கும் ஒருவர் கூறுகையில் “நாற்காலி கொஞ்சம் நகர்வது போலவும், கண்ணாடி ஜன்னல் அதிர்வது போலவும் ஏதோ உணர்ந்தோம். ஆனால் அது ஒரு நிலநடுக்க எச்சரிக்கை என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. விரைவில் கட்டிடத்தின் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து நாங்கள் கீழே விரைந்தோம்” என்று கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் ஒரு வருடத்தில் பல முறை சிறிய நிலநடுக்கங்களை அனுபவிக்கிறது. இருப்பினும் அவை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று NCM அதிகாரி ஒருவர் முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.