நீங்கியது தடை.. இந்தியாவில் இருந்து நேரடியாக சவூதி பயணிக்க அனுமதி.. பயணிகள் மகிழ்ச்சி..!!
சவூதி அரேபியாவில் கொரோனா பரவல் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளில் இருந்து நேரடியாக சவூதி வருவதற்கு தற்பொழுது வரை தடை இருந்து வந்த நிலையில் இனி இந்த நாடுகளில் இருந்து நேரடியாக சவூதி பயணிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
தற்சமயம் இந்தியாவில் இருந்து சவூதி பயணிப்பவர்கள் நேரடியாக சவூதி செல்வதற்கு தடை விதிக்காத அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் 14 நாட்கள் தங்கிய பின்னர் சவூதிக்கு பயணிக்கின்றனர். இதனால் அவர்கள் சவூதி பயணிப்பதற்கான செலவு மிக அதிகமாக உள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 1, 2021 முதல் இந்தியா, பாகிஸ்தான், பிரேசில், வியட்நாம், எகிப்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய ஆறு நாடுகளில் இருந்து பயணிகள் நேரடியாக சவூதி வர அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சவூதி பயணிகள் இனி மூன்றாவது நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை. இருப்பினும், பயணிகளின் தடுப்பூசியின் நிலையைப் பொருட்படுத்தாமல், அவர்கள் சவூதிக்கு வந்த பிறகு நிறுவன தனிமைப்படுத்தலில் ஐந்து நாட்கள் செலவிட வேண்டும் என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் பயன்பாட்டைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
அமைச்சக அறிக்கையின்படி, “உலகளவில் தொற்றுநோயியல் சூழ்நிலையின் முன்னேற்றங்களின் அடிப்படையில், நாட்டின் திறமையான சுகாதார அதிகாரிகளின் தொடர்ச்சியான மதிப்பீட்டிற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் சவூதியில் இருந்து ஊருக்கு செல்ல வேண்டியுள்ளவர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து சவூதி பயணிக்கவுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.