இகாமா, Exit and re entry விசாக்களின் செல்லுபடி தானாகவே இலவச நீட்டிப்பு..!! சவூதி அரசு தகவல்..!!
சவூதி அரேபியாவின் பாஸ்போர்ட்களுக்கான பொது இயக்குநரகம் இந்தியா உள்ளிட்ட நேரடியாக சவூதி பயணிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நாடுகளில் இருப்பவர்களின் ரெசிடென்ஸ் பெர்மிட் (இகாமா) மற்றும் எக்ஸிட் அண்ட் ரீஎன்ட்ரி விசாக்களின் செல்லுபடியை ஜனவரி 31, 2022 வரை கட்டணம் இல்லாமல் தானாகவே நீட்டிக்கத் தொடங்கியுள்ளது.
முன்னதாக இந்த நீட்டிப்பு நவம்பர் 30 வரை மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசின் இந்த முடிவானது சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் அவர்களின் உத்தரவுகளுக்கிணங்க செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சரால் வெளியிடப்பட்ட இந்த நீட்டிப்பு, கொரோனா தொற்றுநோயின் விளைவுகளைச் சமாளிக்க அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்குள் வருகிறது. அதே நேரத்தில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, தொற்றுநோயால் ஏற்பட்ட நிதி மற்றும் பொருளாதார பாதிப்புகளைத் தணிக்க பங்களிக்கிறது.
இதன் மூலம் பாஸ்போர்ட் சேவை தொடர்பான துறைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி தேசிய தகவல் மையத்தின் ஒத்துழைப்புடன் இந்த நீட்டிப்பு தானாகவே மேற்கொள்ளப்படும் என்று இயக்குநரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீட்டிப்பு யாருக்கு..??
>> சவூதியில் இருந்து புறப்படுவதற்கு முன் சவூதியில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களைத் தவிர, கொரோனா வைரஸின் விளைவாக சவூதிக்குள் நேரடியாக நுழைய தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருப்பவர்களின் ரெசிடென்ஸ் பெர்மிட் மற்றும் எக்ஸிட் அண்ட் ரீஎன்ட்ரி விசாக்களின் செல்லுபடியை ஜனவரி 31, 2022 வரை நீட்டித்தல்.
>> கொரோனா காரணமாக பயண இடைநிறுத்தத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் இருக்கும் விசிட்டர்களின் விசிட் விசாக்களின் செல்லுபடி ஜனவரி 31, 2022 வரை நீட்டித்தல்.