இந்தியர்களுக்கு ஒரு நற்செய்தி..!! கோவாக்சின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த WHO..!!
இந்தியாவில தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு அங்கீகரிப்பது தொடர்பாக கடந்த பல நாட்களாகவே விவாதம் சென்று கொண்டிருந்த நிலையில் தற்பொழுது அங்கீகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸினை (covaxin) அவசரகால பயன்பாட்டுப் பட்டியலுக்கு (EUL) உலக சுகாதார அமைப்பு (WHO) அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து, “கோவாக்சின் தடுப்பூசியானது கொரோனாவிற்கு எதிரான பாதுகாப்பிற்கான WHO தரநிலைகளை பூர்த்தி செய்கிறது என்றும், தடுப்பூசியின் நன்மை அபாயங்களை விட அதிகமாக உள்ளது என்றும், இதன் காரணமாக தடுப்பூசியைப் பயன்படுத்தலாம் என்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தீர்மானித்துள்ளது,”என்று WHO ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் WHO இன் ஆலோசனைக் குழு கடந்த வாரம் Covaxin தடுப்பூசி குறித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தடுப்பூசியின் உலகளாவிய பயன்பாட்டிற்கான இறுதி ஆபத்து-பயன் மதிப்பீட்டை நடத்துவதற்கு முன்பு பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கூடுதல் விளக்கங்களை இக்குழு கோரியிருந்தது.
அதனைத்தொடர்ந்து கோவாக்சின் நோய்த்தடுப்பு தொடர்பான WHO இன் ஆலோசனைக் குழுவின் நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட பின்னர், இது 18 மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து வயதினருக்கும் நான்கு வார இடைவெளியுடன் இரண்டு டோஸ்களில் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அவசரகால பயன்பாட்டு பட்டியல் (EUL), தங்கள் ஒழுங்குமுறை முடிவுகளுக்கு WHO வழிகாட்டுதலை பின்பற்றும் நாடுகளுக்கு இந்த கோவாக்சின் தடுப்பூசியை அனுப்ப அனுமதிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபைசர்/பயோஎன்டெக், மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா, ஜான்சன் & ஜான்சன் சினோவாக் பயோடெக் மற்றும் சினோபார்ம் ஆகியவற்றை தொடர்ந்து WHO அங்கீகரித்துள்ள ஏழாவது தடுப்பூசி கோவாக்சின் ஆகும்.
WHO-வின் அறிவிப்பினால் கோவாக்சின் தடுப்பூசி பெற்ற மற்றும் நாட்டிற்கு வெளியே பயணம் செய்ய விரும்பும் மில்லியன் கணக்கான இந்தியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த வாரம் ஓமன் மற்றும் ஆஸ்திரேலியா திங்களன்று கோவாக்சினை செல்லுபடியாகும் தடுப்பூசியாக அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.