அமீரக செய்திகள்

அமீரகத்தில் வரவிருக்கும் பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை.. எமிரேட்ஸ் ரயில்வே திட்டத்தை தொடங்கி வைத்த அமீரக தலைவர்கள்…!!

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களும், அமீரகத்திற்கு வரும் சுற்றுலாவாசிகளும் கூடிய விரைவில் அமீரகம் முழுவதும் ரயில் மூலம் சுற்றிப்பார்க்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா.. ஆம். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு எமிரேட்களையும் இணைக்கும் எமிரேட்ஸ் ரயில்வே திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர்.

துபாயின் எக்ஸ்போ 2020 இல் நடைபெற்ற 50 திட்டங்களைக் கொண்டாடும் ஒரு சிறப்பு நிகழ்வின் போது, ​​நாடு முழுவதும் சரக்குகள் மற்றும் பயணிகளைக் கொண்டு செல்வதற்கான மிகப்பெரிய ஒருங்கிணைந்த அமைப்பான UAE ரயில்வே திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அபுதாபியை தலைமையாக கொண்டு இயங்கி வரும் எதிஹாட் ரயில், சரக்கு போக்குவரத்தை நாடு முழுவதும் ஒருங்கிணைக்கும் திட்டத்தை தொடங்கி அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த அறிவிப்பை நேற்று தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், அமீரகத்தின் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு தொழிற்சங்கத்தின் பலத்தை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய திட்டமாக எதிஹாட் ரயில் உள்ளதாகவும், இந்த திட்டமானது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 11 முக்கிய நகரங்கள் மற்றும் பிராந்தியங்களை இணைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது ட்வீட்டில், எதிஹாட் ரெயில் அதன் திட்டத்தை செயல்படுத்துவதில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிஹாட் ரயில் நெட்வொர்க் அமீரகத்தின் ஒற்றுமையின் உணர்வை பிரதிபலிக்கிறது, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு எமிரேட்டுகளையும் நாட்டின் துறைமுகங்களுடனும் ஒன்றோடொன்று இணைக்கிறது என்றும் கூறியுள்ளார்.

இந்த திட்டம் குறித்து ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் வெயிட்டுள்ள ட்வீட்டில் “தேசிய ரயில்வே திட்டம் நமது தேசிய பொருளாதார அமைப்பில் ஒருங்கிணைப்பதன் உண்மையான அர்த்தத்தை பிரதிபலிக்கிறது, கூட்டாட்சி மற்றும் உள்ளூர் மட்டங்களில் அரசாங்க நிறுவனங்களுக்கு இடையே மிகப்பெரிய கூட்டுறவை நாங்கள் காண்கிறோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், இது நாட்டின் தொலைநோக்கு பார்வைக்கு ஆதரவாக வருகிறது. நாட்டின் முக்கிய தொழில் மற்றும் உற்பத்தி மையங்களை இணைக்கவும், புதிய வர்த்தக வழிகளைத் திறக்கவும் மற்றும் மக்கள் பயணங்களை எளிதாக்கவும், பிராந்தியத்தில் மிகவும் வளர்ந்த வேலை மற்றும் வாழ்க்கை சூழலை உருவாக்கவும் இந்த திட்டம் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தொடங்கப்பட்டுள்ள எமிரேட்ஸ் ரயில்வே திட்டம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் அபுதாபியில் இருந்து துபாய்க்கு 50 நிமிடங்களிலும், அபுதாபியில் இருந்து ஃபுஜைராவுக்கு 100 நிமிடங்களிலும் அமீரக குடியிருப்பாளர்களும், சுற்றுலாவாசிகளும் பயணிக்க அனுமதிக்கும் வகையில் நாடு முழுவதும் போக்குவரத்து வசதியை ரயில் பயணிகள் சேவைகள் மேம்படுத்தும் என்று எதிஹாட் ரயில் CEO ஸாதி மலாக் கூறியுள்ளார்.

எமிரேட்ஸ் ரயில்வேயின் மூன்று முக்கிய திட்டங்கள்..

>> முதல் திட்டம் சரக்கு ரயில் ஆகும், இதில் எதிஹாட் ரயில் சரக்கு சேவைகள் அடங்கும்.

>> இரண்டாவது திட்டம் ரயில் பயணிகள் சேவைகள் ஆகும், இது அபுதாபியில் அமைந்துள்ள அல் சிலாவிலிருந்து (சவூதி அரேபியா பார்டருக்கு அருகிலான பகுதி) ஃபுஜைரா வரை 11 முக்கிய நகரங்களை ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மணிக்கு 200 கிமீ வேகத்தில் இயக்கப்படும் ரயில் சேவை மூலம் பயணிகள் அபுதாபியிலிருந்து துபாய்க்கு 50 நிமிடங்களிலும், அபுதாபியிலிருந்து ஃபுஜைராவுக்கு 100 நிமிடங்களிலும் பயணிக்கலாம். 2030 ஆம் ஆண்டில், பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 36.5 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

>> மூன்றாவது திட்டமானது ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவை ஆகும், இதில் ஸ்மார்ட் போக்குவரத்து தீர்வுகளின் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக ஒரு கண்டுபிடிப்பு மையம் நிறுவப்படும். ஐக்கிய அரபு அமீரகத்தின் நகரங்களுக்குள் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், இலகுரக இரயில் சேவையானது பயணிகள் ரயில் அமைப்புடன் இணைக்கப்படும். கூடுதலாக, பயணங்களைத் திட்டமிடுதல் மற்றும் முன்பதிவு செய்தல், தளவாடச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், துறைமுகம் மற்றும் சுங்கச் சேவைகள் மற்றும் ஒருங்கிணைந்த தளவாடத் தீர்வுகளை வழங்குவதற்கு ஸ்மார்ட் பயன்பாடுகள் மற்றும் தீர்வுகள் உருவாக்கப்படும்.

50 பில்லியன் திர்ஹம்ஸ் முதலீட்டில், 70 சதவீதம் உள்ளூர் சந்தையை குறிவைத்து தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம், 2030 ம் ஆண்டிற்குள் ரயில்வே துறை மற்றும் துணைத் துறைகளில் 9,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்க பங்களிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் 70 முதல் 80 சதவீத கார்பன் உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், அமீரக அரசின் கார்பன் நடுநிலைமை இலக்கை அடைவதற்கான முயற்சிகளுக்கு ஆதரிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.

அமீரகத்தில் சரக்கு போக்குவரத்தை மையமாக கொண்டு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நிலைப் பணிகளைத் தொடங்கிய எதிஹாட் ரயில், அபுதாபியின் வெஸ்டர்ன் ரீஜியன் பகுதியில் அமைந்துள்ள அல் ருவைஸ் மற்றும் மதினத் சையத் ஆகிய இடங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து நாடு முழுவதுமான சரக்கு போக்குவரத்தை எளிதாக்கும் விதமாக, அனைத்து எமிரேட்களையும் இணைக்கும் வண்ணம் எதிஹாட் ரயில் திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இரண்டாம் கட்டத்தின் கட்டுமானம் தொடங்கப்பட்டு தற்போது அதில் 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

தற்போது தொடங்கப்பட்டுள்ள எமிரேட்ஸ் ரயில்வே திட்டத்தின் மூலம் சரக்கு ரயில் போக்குவரத்து தவிர்த்து நாடு முழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்தை தொடங்கவும், அதற்கான திட்டங்களை செயல்படுத்தவும் மூலோபய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!