ஹெலிகாப்டர் விபத்தின் போது தன்னைக் காப்பாற்றியவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த லூலூ தலைவர்..!!
லூலூ குழுமத்தின் தலைவர் M.A. யூசுப் அலி கேரளாவில் தனக்கு விபத்து நிகழ்ந்த போது தன்னைக் காப்பாற்ற உதவிய பனங்காடு பகுதியைச் சேர்ந்த தம்பதிகளை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்துள்ளார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் இப்பகுதியில் விபத்துக்குள்ளானதும் முதலாவதாக இந்த தம்பதியினர் உடனே விபத்து நடந்த இடத்திற்கு வந்து செய்த உதவிக்கு யூசுப் அலி நன்றி தெரிவித்துள்ளார்.
லுலு குழுமம் இது பற்றி கூறுகயில், பனங்காடு பகுதியில் நடந்த இந்த விபத்தின் போது, விபத்தில் சிக்கியது யார் என்று கூட தெரியாமல் மக்கள் உடனே உதவிக்காக வெளியே வந்ததாகவும், தங்கள் உயிரைப் பணயம் வைத்து மீட்புப் பணிகளுக்கு உதவியதாகவும் கூறியுள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு முதலில் வந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி பிஜி ஆகியோரை யூசுப் அலி நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மோசமான வானிலையின் போதும் அவருக்கும் ஹெலிகாப்டரில் இருந்த மற்றவர்களுக்கும் ராஜேஷ் உதவினார் மற்றும் அவரது மனைவி உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யூசுப் அலி ஏற்கெனவே இந்த விபத்து சம்பவத்தில் உதவிய அனைவரையும் பார்க்க விரும்புவதாக தெரிவித்து இருந்தார். ராஜேஷ் மற்றும் பிஜி தம்பதியினரே முதலில் உதவ வந்ததால் அவர்களை முதலாவதாக தற்பொழுது யூசுப் அலி சந்தித்துள்ளார்.
யூசுப்அலி அவர்கள் அந்த குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பரிசுகளையும் வழங்கியுள்ளார்.