துபாயின் தொழில்துறை பகுதியில் ஏற்பட்ட மாபெரும் தீவிபத்து..!! புகை மண்டலமாக காட்சி அளித்த ராஸ் அல் கோர் பகுதி..!!
துபாயில் உள்ள ராஸ் அல் கோர் தொழில்துறை பகுதியில் உள்ள இரண்டு கிடங்குகளில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினை துபாயின் சிவில் பாதுகாப்புக் குழுவினர் துரிதமாக செயல்பட்டு கட்டுப்படுத்தியுள்ளனர்.
தீ விபரது ஏற்பட்டதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்திருந்த நிலையில், ஒரு மணி நேரத்தில் தீயை அணைக்க குழுவினர் போராடியிருக்கின்றனர்.
இந்த தீ விபத்தினால் காயங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பாதுகாப்புக்குழு கூறுகையில், சனிக்கிழமை பிற்பகல் ராஸ் அல் கோர் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக செயல்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ளது.
அறிக்கையைப் பெற்ற ஐந்து நிமிடங்களில் முதல் குழு தளத்திற்கு உடனடியாக வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டன. சிறப்புக் குழுக்கள் தீயை அணைக்கும் பணியில் துரிதமாக செயல்பட்டதால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்க முடிந்தது.
எமரத் அல் யூம் (Emaratalyoum) செய்தி நிறுவன கருத்துப்படி, இந்த கிடங்குகளில் ஒன்றில் சாயங்கள் இருந்ததாகவும், மற்றொன்று கட்டுமானப் பொருட்களை வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.