ஓமானில் பரவிய ஓமிக்ரான்… இருவருக்கு நோய்தொற்றை உறுதி செய்த சுகாதார அமைச்சகம்…
உலகில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய மாறுபாடு கொண்ட ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பானது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில் ஓமானில் முதன் முறையாக ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேறொரு நாட்டிலிருந்து ஓமானிற்கு திரும்பிய இருவர், ஓமிக்ரான் வைரஸ் தொற்றுக்கான சோதனையில் நேர்மறை முடிவைப் பெற்றுள்ளனர்.
இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயணத்திலிருந்து திரும்பிய ஓமான் குடிமக்கள் இருவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது குறித்து அமைச்சகம் அறிவிக்கிறது.” என தெரிவித்துள்ளது.
வைரஸ் பாதித்த நபர்களின் உடல்நிலை சீராக உள்ளதுடன், மேலும் தொற்றுநோயியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், நெரிசலான இடங்களைத் தவிர்த்தல், கைகளை சுத்தமாகப் பராமரித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்குமாறு அனைவருக்கும் அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
முதன்மை சுகாதார நிறுவனங்களில் கிடைக்கும் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெறுவதற்கு 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.