வெளிநாட்டவர்கள் ஓமானிற்குள் நுழைய புதிய விதிமுறைகள்… கொரோனாவிற்கான உச்சக்குழு தகவல்..!!
ஓமானில் கொரோனாவிற்கான உச்சக்குழு நாட்டில் கொரோனா பரவல் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசிக்க ஞாயிற்றுக்கிழமை ஒன்றுகூடியது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காத நிகழ்வுகளை குழு கவனத்தில் எடுத்துள்ளது.
மேலும் இந்த நோய்க்கு எதிராக சமூகத்தின் உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்கும், இந்த நோய் மற்றும் பிற நோய்களைக் கையாள்வதற்கான ஓமன் சுகாதார அமைப்பின் திறனைப் பாதுகாப்பதற்கும் கோவிட்-19 உச்சக் குழு கீழே பட்டியலிடப்பட்டுள்ள புதிய முடிவுகளை எடுத்துள்ளது.
முதலாவதாக, ஓமானிற்கு பயணிக்கும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய வெளிநாட்டவர்கள் நுழைவதற்கு முன்நிபந்தனையாக இரண்டு-டோஸ் தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும்.
இரண்டாவதாக, அதிகபட்சமாக 72 மணி நேரத்திற்குள்எடுக்கப்பட்ட எதிர்மறை PCR சோதனை அறிக்கையை காட்டும் பயணிகளுக்கு மட்டுமே ஓமான் நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும்.
மூன்றாவதாக, தென்னாப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, லெசோதோ, ஈஸ்வதினி மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்கள் ஓமான் நுழைவதைத் தடை செய்யும் முடிவானது ரத்து செய்யப்படும்.
அத்துடன் பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் நுழைவதற்கு தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என்றும் இது ஒரு நிபந்தனையாகவே உள்ளது என்பதை கொரோனாவிற்கான உச்சக் குழு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் கொரோனாவிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நுரையீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பணியிடங்களுக்குள் நுழைவதைத் தடுப்பது மற்றும் பணியிடங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வது, முக கவசங்களை சரியாக அணிவது, சமூக தூரத்தை கடைபிடித்தல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், கூட்ட நெரிசல் மற்றும் கைகுலுக்குதல் போன்றவற்றைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.