12 வயதிற்கு மேற்பட்ட வழிபாட்டாளர்கள் உம்ரா செய்ய அனுமதி வழங்கியது சவூதி அரசு…!!
சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வெளிநாட்டு வழிபாட்டாளர்கள் நாட்டிற்குள் நுழைந்து உம்ரா செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.
முன்னதாக, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே புனித யாத்திரை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவின்படி, 12 வயதுக்கு மேற்பட்ட எவரும் சவூதி அரேபியாவின் புனித மசூதியில் உம்ரா செய்ய அனுமதி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு, GCC குடிமக்கள் மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் வழிபாட்டாளர்கள் நுழைவதற்கான சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
GCC குடிமக்கள் சவுதி அரேபியாவிற்கு வருவதற்கு முன் முகீம் (Muqeem) தளத்தில் தங்கள் தடுப்பூசி நிலைக்கான ஆதாரத்தை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் சவூதிக்கு வந்த பிறகு தவக்கல்னா (Tawakkalna) மற்றும் ஈட்மர்னா (Earmarna) அப்ளிகேஷனிலும் பதிவு செய்ய வேண்டும். தவக்கல்னா அப்ளிகேஷனில் அவர்களின் உடல்நிலை புதுப்பிக்கப்பட்டவுடன், அவர்கள் மக்காவில் உம்ரா மற்றும் வழிபாட்டிற்கான அனுமதிகளை பதிவு செய்யலாம்.
மற்ற நாடுகளில் இருந்து வரும் வழிபாட்டாளர்களும் இதே நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால் முகீமுக்கு பதிலாக, குதூம் (Qudoom) தளத்தில் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.
சமூக விலகல் நடவடிக்கைகள் நீக்கப்பட்டாலும், வழிபாட்டாளர்கள் இன்னும் முக கவசங்களை அணிய வேண்டும் மற்றும் மசூதியில் உம்ரா மற்றும் பிரார்த்தனை செய்ய முன்பதிவு செய்ய வேண்டும்.
சவுதி அரேபியாவுக்கு வெளியில் இருந்து உம்ரா விசாவுடன் வரும் வழிபாட்டாளர்களுக்கு தேவையான அனுமதிகளை உம்ராவிற்கு ஏற்பாடு செய்யும் நிறுவனம் வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.