சவூதி-ஓமான் இடையே முதன் முறையாக திறக்கப்பட்ட நேரடி தரைவழி போக்குவரத்து…!!
வளைகுடா நாடுகளான சவூதி அரேபியாவும் ஓமானும் செவ்வாயன்று தங்கள் நாடுகளுக்கு இடையே முதல் நேரடி நில தொடர்பை திறந்துள்ளன. இதற்கான அறிவிப்பை இரு நாடுகளும் இணைந்து ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன. இதன் மூலம் சவூதி மற்றும் ஓமான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே முதன் முதலாக தரை வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் வரை சவூதி, ஓமான் இடையே தரை வழியாக பயணம் செய்ய வேண்டுமானால் ஐக்கிய அரபு அமீரகம் வாயிலாக பயணிக்க வேண்டும். தற்பொழுது அதற்கான தேவையில்லாமல் நேரடியாகவே பயணிக்கும் வகையில் இந்த புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சாலை திறப்பதன் மூலம் சவூதி அரேபியாவானது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் உள்ள அமீரகம், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் நேரடி தரை வழி போக்குவரத்தை நிறைவு செய்கிறது.
இந்த சாலை திறப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் “சவூதி, ஓமான் ஆகிய நாடுகளுக்கு இடையே 725 கிமீ அளவிலான சாலை திறக்கப்பட்டுள்ளது. இது இரு நாட்டு குடிமக்களின் சுமூகமான இயக்கத்திற்கும் வணிகப் போக்குவரத்திற்கும் பங்களிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
சவூதி தலைநகரான ரியாத்திற்கு அருகிலுள்ள அல்-பத்தா (al batha) சாலை சந்திப்பில் (intersection) இருந்து சவூதி-ஓமான் எல்லையில் இருக்கும் empty quarter crossing வரை இந்த சாலை செல்கிறது. இந்த சாலை திட்டத்திற்காக 1.9 பில்லியன் சவூதி ரியால் ($506 மில்லியன்) செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
இரு நாடுகளையும் இணைக்கும் இந்த சாலை திட்டம், போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக் அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டிருக்கின்றது.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பரிமாற்றத்தை மேம்படுத்துவதிலும், வழிபாட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டத்தை எளிதாக்குவதிலும் இது வகிக்கும் பங்கு காரணமாக அமைச்சின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பரிமாற்றத்தின் அளவை அதிகரிக்க பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது கடந்த ஆண்டு 10 பில்லியன் சவூதி ரியாலைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.