UAE: புத்தாண்டு வான வேடிக்கை நிகழ்வில் இரண்டு கின்னஸ் சாதனைகளை படைக்கவிருக்கும் எமிரேட்…
தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் 2021 ம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் புத்தாண்டிற்கான கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களை கட்ட தொடங்கியுள்ளன. அதிலும் எப்பொழுதுமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் அனைத்து நாட்டு மக்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பும் நாடு ஐக்கிய அரபு அமீரகம். அமீரகத்தில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிபாவில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டமானது பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளது.
துபாயில் மட்டுமல்லாது ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்ற பகுதிகள் முழுவதுமே புத்தாண்டு கொண்டாட்டமானது வான வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் என சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், வரவிருக்கின்ற புத்தாண்டை முன்னிட்டு ராஸ் அல் கைமாவில் வான வேடிக்கையில் இரண்டு கின்னஸ் சாதனைகளை படைக்கவுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ட்ரோன்கள், லைட்ஸ் மற்றும் திகைப்பூட்டும் வண்ணங்களைக் கொண்ட வான வேடிக்கையை நிகழ்த்தி இரண்டு புதிய கின்னஸ் உலக சாதனை படைக்க ராஸ் அல் கைமாவின் எமிரேட் தயாராகி வருகிறது.
முதலாவது வானவேடிக்கை நிகழ்வானது ‘ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ட்ரோன்களை பயன்படுத்துவதாகும்’.
இரண்டாவதாக, ‘ட்ரோன்களைக் கொண்ட மிக உயர்ந்த 12 நிமிட வானவேடிக்கைக் காட்சியினை’ நிகழ்த்தவுள்ளது. இது மாலை 4.00 மணி முதல் பொதுமக்களுக்குத் திறக்கப்படும் என்றும் அல் மர்ஜான் தீவுக்கும் அல் ஹம்ரா வில்லேஜிற்கும் இடையே உள்ள வாட்டர்ஃப்ரண்ட்டில் 4.7 கிலோமீட்டர் பரப்பளவில் பிரம்மாண்ட வானவேடிக்கைகளை நிகழ்த்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், ராஸ் அல் கைமா 2020 ஆம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டமானது (New Year’s Eve Gala of 2020) இது “ஒரே நேரத்தில் அதிக ஆளில்லா வான்வழி வாகனங்கள் மூலம் தொடர்ந்து பட்டாசுகளை வெடிக்கச் செய்தல்” (Most Unmanned Aerial Vehicles for Launching Fireworks Simultaneously) மற்றும் “மிக நீண்ட பட்டாசு நீர்வீழ்ச்சி” (Longest Fireworks Waterfall) ஆகியவற்றுக்கான கின்னஸ் உலக சாதனை பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.