ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் திங்களன்று மத்திய அரசு மற்றும் தனியார் துறைகளின் பணி அமைப்புகளை (work system) ஒருங்கிணைக்கும் பொது விதிகளை அறிவித்துள்ளது.
இந்த விதிமுறைகளின்படி பிப்ரவரி 2, 2022 முதல், ஊழியர்கள் ஒரே மாதிரியான விடுமுறைகளை பெறுவார்கள் என்றும் மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளில் ஊழியர்கள் நெகிழ்வான, பகுதிநேர மற்றும் தற்காலிக வேலை மாதிரிகளைத் (temporary work models) தேர்வுசெய்யும் விருப்பத்தைப் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள், இனம், நிறம், பாலினம், மதம், தேசியம், சமூக தோற்றம் அல்லது இயலாமை ஆகியவற்றின் அடிப்படையில் பணியமர்த்துவதைத் தடைசெய்யும் பாகுபாடுகளுக்கு எதிரான விதிகளின் கீழ் பாதுகாக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன்படி பிப்ரவரி 2, 2022 முதல், நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் வருடாந்திர, மகப்பேறு, துக்கம் மற்றும் படிப்பு போன்றவற்றிற்காக ஒரே மாதிரியான விடுமுறைகளைப் பெறுவார்கள்.
ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானால் அங்கீகரிக்கப்பட்ட இந்த புதிய விதிகள், ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய சட்டச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும். இது 40 புதிய சட்டங்களுடன் நாட்டின் அடுத்த ஐந்து தசாப்தங்களுக்கு முன்னோடியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல் அவார், நாடு முழுவதும் பணியாளர்களின் உரிமைகளை சீரான முறையில் பாதுகாக்கும் வகையில் ஒரு நெகிழ்வான மற்றும் போட்டித்தன்மையுள்ள பணியிடத்தை உருவாக்குவதை இந்த ஒருங்கிணைந்த பொது விதிகள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “இரு துறைகளையும் ஒன்றிணைப்பதன் மூலம், வேகமாக மாறிவரும் தொற்றுநோய்க்கு பிந்தைய உலகில் ஒருங்கிணைந்த, நிலையான மற்றும் திறமையான பணிச்சூழலை நிறுவ நாங்கள் விரும்புகிறோம்” என்றும் கூறியுள்ளார்.
கடந்த மாதம், தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகில் தனியார் துறையின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க, புதிய தொழிலாளர் சட்டத்தை அமைச்சகம் பெரிய சீர்திருத்தங்களுடன் அறிவித்திருந்தது. இந்த பொது சீர்திருத்தங்கள் தனியார் மற்றும் பொதுத் துறைகள் இரண்டையும் ஒரே விதிமுறைகளின் கீழ் கொண்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.