குவைத்தில் கனமழை எதிரொலி.. வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்த உள்துறை அமைச்சகம்…
குவைத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கிய வண்ணம் காணப்படுகிறது.
நாட்டில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக முற்றிலும் அவசியமின்றி குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் தவிர்க்க முடியாத மிக அவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வருமாறும் குவைத்தின் உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் இந்த காலகட்டத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், சிவில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக அவசர எண் 112 அல்லது போக்குவரத்து துறை உதவிக்கு 1804000 என்ற எண்களை அழைக்க தயங்க வேண்டாம் என்றும் MOI அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கிடையில், குவைத்தின் தீயணைப்புப் படைகள், உதவிக்காக 103 அழைப்புகளுக்கு பதிலளித்ததாகவும், ஒரே இரவில் பெய்த மழையைத் தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த சாலைகளிலும் வீடுகளிலும் சிக்கித் தவித்த 106 பேரை மீட்டதாகவும் கூறியுள்ளது.
குவைத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்குப் பின் தற்பொழுது கனமழை பதிவாகியுள்ளது.
மேலும் இங்கு 50 வாகன ஓட்டிகளின் கார்கள் மூழ்கியதாகவும், பெருகி வரும் தண்ணீரால் சாலைகள் தடைபட்டதாகவும் புகார்கள் பெறப்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குவைத்தில் பெய்து வரும் மழை நள்ளிரவு வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சில பகுதிகளில் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் படிப்படியாக மழை குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் குவைத்தில் பெய்து வரும் கனமழையால் திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.