கின்னஸ் சாதனை படைத்த துபாயின் பிரம்மாண்டமான மிதக்கும் தண்ணீர் பூங்கா…!!
தொடர்ந்து பல்வேறு புதுவிதமான பொழுதுபோக்கு நடவடிக்கைகளை திறந்துவரும் துபாயில் தற்பொழுது புதியதாக ஒன்று இணைந்துள்ளது. ஜூமேரா கடற்கரை பகுதியில் கடலில் அமைக்கப்பட்டிருக்கும் மிதக்கும் தண்ணீர் பூங்காவானது உலகின் மிகப்பெரிய மிதக்கும் தண்ணீர் பூங்காவாக கின்னஸ் உலக சாதனை சான்றிதழைப் பெற்றுள்ளது.
கடந்த 2016 இல் முதன்முறையாக தனியார் நிறுவனமான AquaFun தொடங்கிய தண்ணீர் பூங்காவானது இப்போது அதன் முந்தைய அளவை மூன்று மடங்கு அதிகரித்து 42,400 சதுர மீட்டரை எட்டியுள்ளது. இந்த தண்ணீர் பூங்கா வானில் இருந்து பார்க்கும் போது தற்போது ‘ஐ லவ் எக்ஸ்போ 2020 துபாய்’ என்ற வாசகம் தெரியுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு தொடர்ந்து பொதுமக்கள் வந்து மகிழ்ச்சியுடன் தங்களது பொழுதைக் கழித்து வருகின்றனர். ஒரு நாள் முழுவதும் இங்கே செலவிடுவதற்கான டிக்கெட் பாஸின் விலைகள் 155 திர்ஹம் முதல் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.