துபாயின் மிகவும் பிரபலமான தடுப்பூசி மையங்களில் ஒன்றான ஒன் சென்ட்ரல் (One Central) தடுப்பூசி மையம் வரும் வெள்ளிக்கிழமை ஜனவரி 28 முதல் மூடப்படும் என்று துபாய் சுகாதார ஆணையம் (DHA) தெரிவித்துள்ளது.
துபாய் உலக வர்த்தக மையத்தில் செயல்பட்டு வந்த ஒன் சென்ட்ரல் தடுப்பூசி மையமானது, எமிரேட்டில் உள்ள வேறு எந்த தடுப்பூசி மையத்தையும் விட ஒரு நாளைக்கு அதிக ஊசி மருந்துகளை வழங்கும் திறன் கொண்டதாகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2020 ம் ஆண்டு டிசம்பரில் துபாயில் தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த மையத்தில் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து 23 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் அமீரகத்தில் நிர்வகிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அமீரகத்தில் வசிக்கக்கூடிய மக்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியான 100 சதவிகித மக்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்றுள்ளனர் என்பதும், 93 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும், கொரோனாவின் மாறுபட்ட வைரஸ் பரவலை தொடர்ந்து இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரும் மீண்டும் ஒரு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள அமீரக அரசு அறிவுறுத்தியுளளது. அபுதாபியில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் பணியிடத்தில் நுழைவதற்கும், அமீரக குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கும் பூஸ்டர் டோஸ் போட்டிருப்பது அவசியம் என்பதும் கவனிக்கத்தக்கது.