குவைத்தில் மீண்டும் கட்டுப்பாடு.. சமூக ஒன்றுகூடல்களுக்கு தடை.. குவைத் வர 72 மணிநேர PCR வேலிடிட்டி கட்டாயம்..!!
குவைத்தில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று உயர தொடங்கியுள்ளதால், உள்ளரங்கங்களில் நடைபெறும் அனைத்து விதமான சமூக ஒன்று கூடல்களுக்கு வரும் ஜனவரி 9 முதல் தடை விதிக்க குவைத் அமைச்சரவை நேற்று டிசம்பர் 3, திங்களன்று ஒப்புக்கொண்டதாக குவைத் அரசாங்கத்தின் தகவல் தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.
குவைத்தில் நிலவி வரும் தற்போதைய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு அமைச்சரவையால் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 9, 2022 ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்த மாதம் பிப்ரவரி 28, 2022 திங்கட்கிழமை வரை உட்புற இடங்களில் நடைபெறும் அனைத்து வகையான சமூகக் ஒன்று கூடல்களுக்கும் தற்காலிகத் தடை விதிக்க அமைச்சர்கள் குழு தீர்மானித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் குவைத் நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளும் இன்று செவ்வாய்கிழமை டிசம்பர் 4 ம் தேதி முதல், புறப்படுவதற்கு முன்னதாக 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையின் நெகட்டிவ் ரிசல்ட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருவதால் குவைத் அரசு தனது நாட்டு குடிமக்களை உடனடியாக நாடு திரும்புமாறும் வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் போட்டுக்கொண்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன் அனுமதி இல்லாமல் பூஸ்டர் டோஸை பெறலாம் என்று சுகாதார அமைச்சகம் நேற்று அறிவித்தது. எனினும் மற்றவர்களுக்கு பூஸ்டர் டோஸை பெற முன்பதிவு அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
கொரோனவிற்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் ஜாபர் காஸ்வே (Jaber Causeway), மிஷ்ரெஃப் ஃபேர்கிரவுண்ட்ஸ் (Mishref fairgrounds) மற்றும் ஜிலீப் அல்-ஷுயூக் இளைஞர் மையம் (Jleeb Al-Shuyoukh youth center) மற்றும் நாடு முழுவதும் உள்ள பொது மருத்துவமனைகளில் கிடைக்கும் எனவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.