குவைத்தில் இந்தியர் ஒருவர் தற்கொலை… கடன் மற்றும் குடும்ப பிரச்சனையால் விபரீத முடிவு…!!
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றான குவைத்தில் 56 வயதான இந்தியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் கடன் மற்றும் குடும்ப பிரச்சனைகளால் அவதிப்பட்டார் என்று அவரது நண்பர்கள் தெரிவித்ததாக குவைத்தின் அல் அன்பா செய்தித்தாள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டதை அடுத்து, குவைத் நகரின் தெற்கே இருக்கும் அல் ஃபர்வானியா கவர்னரேட்டில் உள்ள தற்கொலை செயத நபரின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர், அவரது உடலை தடயவியல் மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
சமீப மாதங்களில், குவைத்தில் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
கடந்த மாதம், ஒரு இந்தியர் மற்றும் ஒரு குவைத் இளம்பெண் இரண்டு பேர் தனித்தனி தற்கொலை வழக்குகளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
அதே போல் டிசம்பரில், தற்கொலை முயற்சியில் தன்னைத்தானே எரித்துக் கொள்ள முயன்ற எகிப்திய வெளிநாட்டவரை குவைத் காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த வருட அக்டோபரில், குவைத்தில் தற்கொலை முயற்சிகள் அதிகரிப்பதை தொடர்ந்து, தற்கொலைக்கு முயற்சிக்கும் வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று கூறியது.
மேலும் உலகின் மிக நீளமான பாலங்களில் ஒன்றான குவைத்தில் இருக்கும் ஷேக் ஜாபர் காஸ்வேயில் தற்கொலை முயற்சிகள் அதிகரித்ததை அடுத்து, குவைத் அதன் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகவும் குவைத் ஊடகங்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.