ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) தனியார் துறை நிறுவனங்களை ஊதிய பாதுகாப்பு அமைப்பு (WPS) மூலம் குறிப்பிட்ட தேதிகளில் ஊழியர்களின் சம்பளத்தை செலுத்த உறுதியளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து MoHRE இன் ஆய்வு விவகாரங்களுக்கான உதவி துணைச் செயலாளர் மகேர் அல் ஓபேட் கூறுகையில், “நிறுவனங்கள் சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவது முதலாளி, தொழிலாளி தரப்பினருக்கு இடையேயான ஒப்பந்த உறவின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதோடு, சரியான நேரத்தில் மற்றும் குறிப்பிட்ட தொகையில் ஊதியத்தை செலுத்துவதன் விளைவாக தொழிலாளர் உற்பத்தித்திறனை அதிகரிக்க பெரிதும் பங்களிக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும் பரஸ்பர சம்மதம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே முடிவடைந்த ஒப்பந்தங்களின்படி சமநிலையான மற்றும் நிலையான உறவுகளை வளர்ப்பதில் MoHRE ஆர்வமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து “நாட்டின் தொழிலாளர் சந்தையில் சட்டப்பூர்வ நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக, தொழிலாளியின் ஊதியத்தைப் பெறுவதற்கான உரிமையை அமைச்சகம் உறுதி செய்ய முயல்கிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கியுடனான மூலோபாய கூட்டாண்மை மூலம், WPS இன் நெறிமுறையானது முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை எளிதான வழியில் நிறைவேற்ற உதவுகிறது என்று அல் ஓபேட் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது சம்பந்தமாக MoHRE ஆல் பயன்படுத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் நடைமுறைகள் மூலம் ஊதிய மாற்றம் தொடர்பான எந்தவொரு ஒப்பந்தத்தையும் தங்கள் தொழிலாளர்களுடன் பதிவு செய்து ஆவணப்படுத்துமாறு அவர் முதலாளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தன்னுடன் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு ‘கணக்கின் அறிக்கை (statement of account)’ சேவை மூலம், முதலாளிகள் தங்கள் நிறுவனங்களின் கோப்புகள் மற்றும் அவர்களின் தொழிலாளர்களின் நிலை தொடர்பான அனைத்து தரவு மற்றும் தகவல்களும் இதில் சேகரிக்கப்படும்.
ஐக்கிய அரபு அமீரகம் WPS எனும் ஊதிய பாதுகாப்பு முறையை முதன் முதலில் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச தொழிலாளர் அமைப்பால் இதற்காக அமீரகம் பாராட்டப்பட்டது. பின்னர் பல நாடுகளால் தொழிலாளர்களின் ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதிசெய்யும் மின்னணு வழிமுறையாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.