விசிட் விசாவில் இருந்து கொண்டே வேலை செய்வதற்கு அமீரகம் விதிக்கும் கடுமையான தண்டனை என்ன…??
நீங்கள் வேலை தேடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்து வேலை வாய்ப்பையும் பெற்றிருந்தால், அமீரகத்தில் உங்களின் புதிய வேலைப் பணியைத் தொடங்குவதற்கு முன், உங்கள் ஆவணங்கள் ஒழுங்காக இருப்பதை உறுதி செய்வது அவசியமாகும்.
ஏனெனில், சரியான வேலை அனுமதி (work permit) இல்லாமல் விசிட் விசா போன்ற மற்ற விசாக்களில் வேலை செய்வது ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலாளர் சட்டங்களை கடுமையாக மீறுவதாகும்.
ஜனவரி 12 அன்று தனது சமூக ஊடக பக்கத்தில் இது குறித்து பதிவு வெளியிட்ட, துபாய் பப்ளிக் பிராசிகியூஷன் பொதுமக்களை எச்சரித்துள்ளது. அதில் தேவையான பணி அனுமதி பெறாமல் அமீரகத்தில் பணிபுரிபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 10,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் வெளியிடப்பட்ட ஆலோசனையில் கூறப்பட்டுள்ளதாவது, “விசிட் விசாவின் கீழ் நாட்டிற்குள் நுழைந்த ஒவ்வொரு வெளிநாட்டவரும் நாட்டில் பணிபுரிய விரும்பினால் தங்களின் விசா நிலையை மாற்றிக்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். இல்லையெனில் அவர் மூன்று மாத காலத்திற்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படுவார் மற்றும் 10,000 க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும் அல்லது இந்த இரண்டு அபராதங்களில் ஏதேனும் ஒன்று விதிக்கப்படலாம். அத்துடன் அவர் அமீரகத்திலிருந்து நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிடலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைக்கான அனுமதியை பெறுவது எப்படி?
நீங்கள் தனியார் துறையிலோ, ஃப்ரீ சோனிலோ (free zone) அல்லது பொதுத் துறையில் உள்ள நிறுவனத்திலோ பணிபுரிவதைப் பொறுத்து, அது தொடர்புடைய அதிகாரியால் உங்கள் பணி அனுமதி வழங்கப்படும்.
தனியார் துறைக்கான அனைத்து பணி அனுமதிகளும் மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தால் (MOHRE) வழங்கப்படுகின்றன.
அதே நேரத்தில் ஒவ்வொரு ஃப்ரீ சோனும் (free zone) தொழிலாளர் ஒப்பந்தங்கள் மற்றும் அவர்களின் அதிகார வரம்பிற்குள் உள்ள முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான உறவுகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
பொதுத் துறையில், கூட்டாட்சி மட்டத்தில், அரசாங்க மனித வளங்களுக்கான மத்திய ஆணையமானது (FAHR) 2008 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணைச் சட்டம் எண். 11 க்கு உட்பட்ட அமைச்சகங்கள் மற்றும் கூட்டாட்சி அதிகாரிகளுக்கான மனித வளங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு எமிரேட்டிலும் உள்ள அரசாங்கத் துறைகளுக்கு அந்தந்த எமிரேட்டில் இருக்கும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகளால் இது நிர்வகிக்கப்படுகிறது.
ஒரு தொழிலாளியாக நீங்கள் எந்த அதிகார வரம்பிற்கு உட்பட்டவராக இருந்தாலும், நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் நீங்கள் பணிபுரியத் தொடங்கும் போது, உங்களிடம் சரியான பணி அனுமதி இருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
#ثقافة_قانونية #نيابة_دبي #نيابة_الجنسية_والإقامة pic.twitter.com/YjxpVhji7u
— نيابة دبي (@DubaiPP) January 12, 2022