அமீரகத்தில் வசிக்கும் நபர்கள் ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் விமானத்திற்கான முன்பதிவு செய்ய வேண்டிய நேரமிது. விமானக் கட்டணங்கள் அதிகரிக்கத் தொடங்குவதற்கு முன், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு பயண முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பயணத் துறை நிர்வாகிகள், இந்த விமுமுறை நாட்களில் பயணிக்க முன்பதிவுகள் அதிகரிக்கும் போது விமானக் கட்டணங்கள் தொடர்ந்து உயரும் என்றும், புனித ரமலான் மாதம் தொடங்கியவுடன் அவை உயரத் தொடங்கும் என்றும், ஈத் அல் பித்ர் வாரத்தில் கட்டணங்கள் இரண்டு மடங்கு அதிகமாக உயரும் என்றும் கூறுகின்றனர்.
எனவே, ஈத் விடுமுறைக்கு தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திக்கவோ அல்லது விடுமுறைக்காகவோ பயணம் செய்ய விரும்பும் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் இப்போதே டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளுமாறு அவர்கள் கூறுகின்றனர்.
பிறை பார்ப்பதைப் பொறுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் ஈத் அல் ஃபித்ரின் போது நான்கு முதல் ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வானியல் மற்றும் விண்வெளி அறிவியலுக்கான சர்வதேச ஒன்றியம் ரமலான் ஏப்ரல் 2, 2022 இல் தொடங்கும் என்று கணித்துள்ளது. அதே நேரத்தில் ஈத் அல் பித்ர் பெரும்பாலும் மே 2 அன்று கொண்டாடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் வருவாய் மேலாண்மை அமைப்பின் அடிப்படையில் செயல்படுவதால், தேவை அதிகரிக்கும் போது விமானக் கட்டணங்கள் அதிகரிக்கின்றன.
முன்கூட்டியே விமானத்திற்கான இக்கெட்டை முன்பதிவு செய்து கொள்வது சிறந்தது என்று பயண முகவர்கள் தெரிவிக்கின்றனர். சில குடியிருப்பாளர்கள் தங்களுக்கான விடுமுறை அனுமதியை ரமலான் மாதத்தில்தான் பெறுகிறார்கள். இதனால் அவர்கள் ரமலான் மாத மத்தியில் பயண டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்கிறார்கள். அந்த நேரத்தில் விமான டிக்கெட்டிற்கான தேவை அதிகரிப்பதால் டிக்கெட் கட்டணம் பெரிதளவில் உயரும் என எதிர்பார்ப்பதாக பயண முகவர்கள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.