அபுதாபியில் உள்ள ஹம்தான் ஸ்ட்ரீட்டில் இருக்கும் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் நள்ளிரவு திடீரென தீவிபத்து நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீவிபத்தைக் கட்டுப்படுத்தியதுடன் விசாரணை மேற்கொண்டதில் தீவிபத்திற்கான காரணம் கேஸ் சிலிண்டர் வெடித்தது தான் என தெரியவந்துள்ளது.
சிவில் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கு புதன்கிழமை நள்ளிரவு 12.09 மணியளவில் தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததாகவும் அதனைத் தொடர்ந்து அதன்பாதுகாப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டிடத்தில் இருந்த குடியிருப்பாளர்களை வெளியேற்றி தீயை அணைத்து நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறைவாகவே உள்ளன என்றும் இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அனைத்து குழுக்களும் நிலைமையைக் கட்டுப்படுத்தி வருவதாக அபுதாபி சிவில் பாதுகாப்பு உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இக்குழுவானது தகவல்களுக்கு அதன் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து வரும் தகவல்களை மட்டும் நம்பியிருக்கவும், வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்புவதைத் தவிர்க்கவும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.