அபுதாபி ஷேக் சையத் மசூதி போலவே இந்தோனேசியாவில் கட்டப்பட்ட மசூதி..!! திறந்து வைத்த அமீரக அதிபர்..!!
ஐக்கிய அரபு அமீரக தலைவரான மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதை முன்னிட்டு இந்தோனேசியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தோனேசியா சென்றடைந்த அவர் இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோவுடன் இணைந்து அபுதாபியில் இருக்கும் ஷேக் சையத் கிராண்ட் மசூதியினை தழுவி இந்தோனேசியாவில் கட்டப்பட்டுள்ள மசூதியை திறந்து வைத்துள்ளார்.
இந்த விழாவின் புகைப்படங்களை அமீரக அதிபர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இது பற்றி அவர் தெரிவிக்கையில், “மசூதி அமைதி மற்றும் (ஐக்கிய அரபு அமீரக ஸ்தாபக தந்தையின்) நல்லெண்ணத்தின் மதிப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நீண்டகால உறவுகளை பிரதிபலிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
அபுதாபியில் இருக்கக்கூடிய ஷேக் சையத் கிராண்ட் மசூதி உலகின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாகும் மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பை அழகாக இணைக்கும் கட்டிடக்கலையின் தலைசிறந்த படைப்பாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மறைந்த ஜனாதிபதி ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானால் இந்த மசூதி கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. அவர் அமீரக தலைநகரான அபுதாபியில் ஒரு கலாச்சார இடத்தை உருவாக்குவதற்காக அனைத்து பின்னணியிலிருந்தும் மக்களை வரவேற்கும் மற்றும் ஊக்குவிக்கும் வண்ணம் மசூதியை கட்டினார். 2004 இல், ஷேக் சையத் மரணித்த பின்னர் இந்த மசூதியின் ஒரு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டார்.
இந்த மசூதிக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் பார்வையாளர்கள் சுற்றிப்பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.