UAE: மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராக காவல்துறை விடுத்த எச்சரிக்கை..!!
வாகனங்களை நியமிக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தாமல் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க தவறும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக ஷார்ஜா காவல்துறையானது எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஷார்ஜா காவல்துறை இது குறித்து வெளியிட்டுள்ள ஒரு பதிவில், போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை சீரற்ற முறையில் பார்க்கிங் செய்வதைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய முறையில் வாகன இயக்கத்தைத் தடுப்பது போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கும் மற்றும் வாகன ஓட்டிகளின் நேரத்தை வீணடிக்கும் என்று குடியிருப்பாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
ஃபெடரல் போக்குவரத்துச் சட்டத்தின்படி, வாகனங்களை நியமிக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தாமல் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்கத் தவறினால் 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்பதையும் காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டியுள்ளது.
ஏற்கனவே, இந்த மாதத் தொடக்கத்தில் தராவீஹ் அல்லது பிற தொழுகைகளின் போது தாறுமாறாக சீரற்ற முறையில் வாகனத்தை நிறுத்துவதைத் தவிர்க்குமாறு அபுதாபி காவல்துறை குடியிருப்பாளர்களை எச்சரித்திருந்தது. அதே போல் அபுதாபியில் பேருந்து நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்துவதும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் அறிவுறுத்தியிருந்தது.
அதுமட்டுமல்லாமல், கடந்த வாரம் அபுதாபி முனிசிபாலிட்டி நடைபாதை மற்றும் நியமிக்கப்படாத பகுதிகளில் பார்க்கிங் செய்வது மற்றும் பிற சாலைப் பயனாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவது போன்ற விதிமீறல்களுக்கு 1,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும், அபராதம் விதிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் அபராதத் தொகையை செலுத்தி விட்டால், அபராதம் 500 திர்ஹம்களாக குறைக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.