UAE: போக்குவரத்து விதிகளில் கடுமையான மாற்றத்தை கொண்டு வரும் ராஸ் அல் கைமா.. மாரச் முதல் அமல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுவது பொதுவான ஒரு நடைமுறையாகும். அத்துடன் குறிப்பிட்ட விதிமீறலின் தீவிரத்தைப் பொறுத்து வாகனம் குறிப்பிட்ட காலத்திற்கு பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும், உரிமையாளர்கள் அவற்றை விடுவிக்க கணிசமான தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும்.
இந்த விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வரும் பட்சத்தில், ராஸ் அல் கைமாவில் சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், ஓட்டுனர்கள் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதைக் குறைக்கவும் மார்ச் 1 முதல் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் கார் பறிமுதல் சட்டங்கள் ஆகியவை கடுமையாக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, ராஸ் அல் கைமாவில் மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் கட்டணத்தை அதிகரிப்பதுடன் சாலை விதிகளை மீறும் போது கார்களை சிறைபிடிக்கக்கூடிய நாட்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ராஸ் அல் கைமாவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிகளின் படி, உங்கள் காரை எதற்காக பறிமுதல் செய்யலாம் மற்றும் அதனை விடுவிக்க நீங்கள் கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதற்கான பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
- சாலைப் பந்தயங்களில் நம்பர் பிளேட் இல்லாமல் அல்லது சேதப்படுத்தப்பட்ட நம்பர் பிளேட் மூலம் பங்கேற்பது – வாகனம் 120 நாட்களுக்கு பறிமுதல் மற்றும் 20,000 திர்ஹம் அபராதம்
- ராஸ் அல் கைமா காவல்துறையின் அனுமதியின்றி சாலைப் பந்தயங்களில் பங்கேற்பது – வாகனம் 90 நாட்களுக்கு பறிமுதல் மற்றும் 10,000 திர்ஹம் அபராதம்
- அங்கீகரிக்கப்படாத அணிவகுப்பில் பங்கேற்பது – 15 முதல் 120 நாட்கள் வரை வாகனம் பறிமுதல் மற்றும் 10,000 திர்ஹம் அபராதம்
- மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஸ்டண்ட் செய்தல் – 120 நாட்கள் வரை வாகனம் பறிமுதல் மற்றும் 10,000 திர்ஹம் அபராதம்
- வேகம் மற்றும் இரைச்சல் அளவை அதிகரிக்க வாகனத்தை மாற்றியமைத்தல் – 60 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் மற்றும் 5,000 திர்ஹம் அபராதம்
- நடைபாதையில் பொழுதுபோக்கிற்காக மோட்டார் சைக்கிள் அல்லது குவாட் பைக்கை (quad bike) ஓட்டினால் – 90 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் மற்றும் 3,000 திர்ஹம் அபராதம்
- அதிக அளவு மாசுபடுத்தும் வாகனத்தை ஓட்டினால் – 30 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் மற்றும் 3,000 திர்ஹம் அபராதம்
மேற்கூறியவை தவிர, ஒரு வருடத்திற்குள் வாகன ஓட்டி மீண்டும் குற்றம் செய்து பிடிபட்டால், பறிமுதல் காலம் மற்றும் விடுவிப்பு கட்டணம் இரட்டிப்பாகும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல்களுக்காக சிறைபிடிக்கப்பட்ட கார்களை விடுவிப்பதற்காக மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டணத்துடன் தற்போதுள்ள போக்குவரத்து அபராதங்களையும் சேர்த்து வாகன ஓட்டி செலுத்த வேண்டும்.
புதிய விதிமுறைகள் பாதுகாப்பான சாலைகளுக்கு போக்குவரத்து சட்டங்களைப் பின்பற்ற வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் என்று கூறிய RAK காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அல் நுவைமி, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளை அறிவுறுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel