ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வருவதால், நிறுத்தப்பட்ட காருக்குள் நுழைவது ஒரு அடுப்பிற்குள் நுழைவது போன்ற உணர்வைத் தரும். ஆனால், ஓட்டுநர்கள் கவலைப்பட வேண்டியது இந்த அசௌகரியத்தைப் பற்றி மட்டுமல்ல. கோடை வெயிலில் சிறிது நேரத்திலேயே, வாகனங்களுக்குள் விடப்படும் பல அன்றாடப் பொருட்கள் உருகலாம், கசியலாம், அவற்றின் செயல்திறனை இழக்கலாம் அல்லது தீப்பொறியை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போது அமீரகம் மற்றொரு கடுமையான கோடையை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், நிறுத்தப்பட்ட வாகனங்கள் மனிதர்களுக்கும் உடைமைகளுக்கும் விரைவாக ஆபத்தான சூழல்களாக மாறக்கூடும் என்று வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டப்படுகிறது.
நேரடி சூரிய ஒளியில், காரின் உட்புறம் சில நிமிடங்களிலேயே அபாயகரமான உயர் வெப்பநிலையை அடைந்து, சாதாரணப் பொருட்களைப் ஆபத்தானவையாக மாற்றக்கூடும். மொபைல் மற்றும் பவர் பேங்குகள் முதல் வாசனைத் திரவியங்கள் மற்றும் ஏரோசல் ஸ்ப்ரேக்கள் வரை, பல அன்றாடப் பொருட்கள் சூடான வாகனத்திற்குள் விடப்படும்போது அதிக வெப்பமடையலாம், விரிவடையலாம் அல்லது வெடிக்கவும் செய்யலாம்.
மிகவும் ஆபத்தான பொருட்களில் லைட்டர்கள், தீப்பெட்டிகள், டியோடரண்ட் கேன்கள், ஏர் ஃப்ரெஷ்னர்கள், ஹேண்ட் சானிட்டைசர், இ-சிகரெட்டுகள் மற்றும் உதிரி பேட்டரிகள் ஆகியவை அடங்கும். அதுமட்டுமில்லாமல், லித்தியம்-அயன் பேட்டரிகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் லேப்டாப்கள் போன்ற மின்னணு சாதனங்களும், அதிகப்படியான வெப்பத்திற்கு உள்ளாகும் போது நிலைத்தன்மையற்றதாக மாறக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இவை தவிர, தீப்பற்றாத பொருட்கள்கூட கணிசமான சேதத்திற்கு உள்ளாகலாம் என்று கூறுகின்றனர். குறிப்பாக, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், வைட்டமின்கள் மற்றும் இன்சுலின் ஆகியவை அவற்றின் செயல்திறனை இழக்கக்கூடும், அதே சமயம் அழகுசாதனப் பொருட்கள், சன்ஸ்கிரீன் மற்றும் சருமப் பராமரிப்புப் பொருட்கள் பெரும்பாலும் உருகிவிடும் அல்லது சிதைந்துவிடும் என்று குறிப்பிடுகின்றனர். முக்கியமாக, சூடான வாகனங்களில் விடப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், தண்ணீரில் இரசாயனங்களை வெளியிடக்கூடும், இதனால் அவை குடிப்பதற்குப் பாதுகாப்பற்றதாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர்.
கூடுதலாக, சன் கிளாஸ், வங்கி அட்டைகள், எமிரேட்ஸ் அடையாள அட்டைகள், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் அச்சிடப்பட்ட புகைப்படங்கள் போன்ற தனிப்பட்ட உடைமைகளையும் வெப்பம் சேதப்படுத்தக்கூடும். உணவுப் பொருட்கள், சாக்லேட்டுகள் மற்றும் மளிகைப் பொருட்கள் குறிப்பாக எளிதில் சேதமடையக்கூடியவை, மேலும் நிறுத்தப்பட்ட காருக்குள் அவை விரைவாகக் கெட்டுப்போகக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, குழந்தைகளையும் செல்லப் பிராணிகளையும் ஒருபோதும் வாகனத்திற்குள் கவனிக்காமல் விட்டுச் செல்ல வேண்டாம் என்று ஒவ்வொரு கோடை காலத்திலும் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். ஏனெனில், மூடப்பட்ட காருக்குள் வெப்பநிலை வேகமாக உயர்ந்து, சில நிமிடங்களிலேயே உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளை உருவாக்கக்கூடும்.
மேற்கூறியவாறு, பல பொருட்களை வாகனங்களிலிருந்து அகற்ற வேண்டும் என்றாலும், சிலவற்றை கைவசம் வைத்திருப்பது நல்லது. தீயணைப்பான், முதலுதவிப் பெட்டி, ஜம்பர் கேபிள்கள், ஒளிரும் சூரிய மறைப்பு (sunshade) மற்றும் அவசரகால ஜன்னல் உடைக்கும் கருவி போன்ற பாதுகாப்பு அத்தியாவசியப் பொருட்கள், அவசர காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், வாகன ஓட்டிகள் முடிந்தவரை நிழலான இடங்களில் வாகனங்களை நிறுத்தவும், முன்பக்கக் கண்ணாடி சன் ஷேடுகளைப் பயன்படுத்தவும், தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஏர் கண்டிஷனர் மூலம் வாகனத்தின் உட்புறத்தைக் குளிர்விக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாடு முழுவதும் கோடைக்கால வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உங்கள் காருக்குள் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதைச் சரிபார்ப்பது, அதிக செலவு வைக்கக்கூடிய சேதங்களைத் தவிர்க்கவோ அல்லது உயிர்களைக் காப்பாற்றவோ கூட உதவும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel