அமீரக செய்திகள்

UAE: ரமலானில் ஓவர் டைம் பார்ப்பவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட கூடுதல் சம்பளம் எவ்வளவு..? வேலைவாய்ப்புச் சட்டம் கூறுவது என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் புனித மாதத்தில் குறைக்கப்பட்ட வேலை நேரம் நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும், ஒரு ஊழியர் ரமலான் வேலை நேரத்தை விட அதிகமாக வேலை செய்வதன் மூலம் கூடுதல் நேரத்திற்கான சம்பளத்தை பெற முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். இது குறித்து அமீரகத்தின் வேலைவாய்ப்புச் சட்டம் என்ன கூறுகிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

அமீரக அரசாங்கம் ரமலான் மாதத்தில் ஊமியர்களின் சாதாரண வேலை நாட்களான 8 மணி நேரத்தில் இரண்டு மணிநேரம் குறைக்கப்பட்டு 6 மணி நேர வேலை நேரத்தை வழங்குகிறது. இது அமைச்சரவை தீர்மானம் எண். 1 இன் பிரிவு 15(2) உடன் படிக்கப்பட்ட வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 17(4) இன் படி, புனித மாதத்தில் வழக்கமான வேலை நேரம் இரண்டு மணிநேரம் குறைக்கப்படும் என்பதற்கு ஏற்ப வருகிறது.

அதேபோன்று, ஒரு முதலாளி தனது ஊழியரை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேல் வேலை செய்யுமாறு அழைத்தால், அந்த பணியாளருக்கு கூடுதல் நேர ஊதியம் பெற உரிமை உண்டு என்பது வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 19-ன் படி உள்ளது.

மேலும், வேலைவாய்ப்புச் சட்டத்தின் 19 வது பிரிவில் பின்வரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அந்த பணியாளரை கூடுதல் நேர வேலைக்கு முதலாளி பணியமர்த்தலாம் என்றும் வேலைவாய்ப்பு சட்டத்தால் கூறப்பட்டுள்ளது. அவை,

1. ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரத்திற்கு மிகாமல் இருந்தால், முதலாளி ஊழியரை கூடுதல் வேலை நேரங்களுக்குப் பணியமர்த்தலாம். மேலும், சட்டத்தின் நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகளின்படி பணியாளர் அத்தகைய மணிநேரங்களுக்கு மேல் வேலை செய்யக்கூடாது. எவ்வாறாயினும், 3 வாரங்களில் மொத்த வேலை நேரம் 144 மணிநேரங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. பணிச்சுமை காரணமாக, ஊழியரை சாதாரண வேலை நேரத்தை விட அதிகமான மணிநேரம் பணியமர்த்தப்பட வேண்டும் எனில், அத்தகைய நீட்டிக்கப்பட்ட நேரம் கூடுதல் நேரமாக கருதப்படும், அதற்காக பணியாளருக்கு அவரது சாதாரண வேலை நேரத்திற்கான சம்பளம் மற்றும் அந்த சம்பளத்தில் குறைந்தபட்சம் 25% கூடுதல் ஊதியமாக வழங்கப்பட வேண்டும்.

3. அதேபோல், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கூடுதல் நேரம் பணியமர்த்தப்பட வேண்டும் என்ற பணிச்சூழலில் பணிபுரிந்தால், ஊழியர் அவரது சாதாரண வேலை நேரத்துக்கான சம்பளம் மற்றும் அந்த சம்பளத்தில் குறைந்தபட்சம் 50% சம்பளம் கூடுதலாகப் பெறலாம். இந்த நடைமுறை ஷிப்ட் முறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொருந்தாது.

4. வேலை ஒப்பந்தம் அல்லது உள் வேலை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வு நாளில் ஊழியர் பணியமர்த்தப்பட்டால், அவருக்கு மாற்று ஓய்வு நாளுடன் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் அல்லது அவரது சாதாரண வேலை நேரத்திற்கான சம்பளம் மற்றும் அந்த சம்பளத்தில் குறைந்தபட்சம் 50% சதவீத சம்பளம் கூடுதலாக வழங்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, 2022 ஆம் ஆண்டின் அமைச்சரவை தீர்மானம் எண். 1 இன் பிரிவு 15(4) (b) இன் படி , ஒரு ஊழியர் நிறுவனத்தின் நிர்வாகம் (Manager) அல்லது மேற்பார்வை (Supervisor) நிலையில் இருந்தால், அவர் எந்த கூடுதல் நேர ஊதியத்திற்கும் தகுதியற்றவராக இருக்கலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!