அமீரக செய்திகள்

UAE: ஜூன் 1 முதல் அனைத்து ‘சிங்கிள் யூஸ்’ பைகளுக்கும் தடை!! அறிவிப்பை வெளியிட்ட துபாய்..!!

துபாயில் எதிர்வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் சில்லறை விற்பனை நிலையங்கள் முழுவதும் உபயோகப்படுத்தப்படும் அனைத்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பைகள் (all single use bags) தடை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கடைகள் இந்த பைகளுக்கு பதிலாக இலவசமாக மாற்று பைகளை நுகர்வோர்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயமில்லை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த தடையில் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு அனைவரும் உபயோகப்படுத்தும் சிங்கிள் யூஸ் பைகளும் அடங்கும் என்பதால்,, ஷாப்பிங் செய்யக்கூடிய நபர்கள் மறுபயன்பாட்டு பைகளைக் கடைக்கு கொண்டு செல்லுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும், தடையை மீறி இந்த பொருட்களை பயன்படுத்தினாலோ, விநியோகித்தாலோ அவர்களுக்கு 200 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்றும், முந்தைய குற்றத்தின் ஒரு வருடத்திற்குள் இதே விதிமீறல் புரிந்தால், அபராதம் அதிகபட்சம் 2,000 திர்ஹம்ஸுக்கு மிகாமல் இரட்டிப்பாக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விதியை மீறும் கடைகளை துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு தெரிவிக்குமாறு ஷாப்பிங் செய்பவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், பின்வரும் பைகளுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது:

  • ரொட்டி பைகள்
  • ஆன்லைனில் பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் பைகள்
  • குப்பை தொட்டி பைகள்
  • காய்கறிகள், இறைச்சிகள், மீன்கள் மற்றும் கோழிகளுக்கான பைகள்
  • சலவை பைகள்
  • எலெக்ட்ரானிக் சாதன பைகள்.
  • தானிய பைகள்.

ஏற்கனவே, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு 25-ஃபில் கட்டணத்தை விதிக்க வணிகங்களை துபாய் எமிரேட் கட்டாயப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழிகாட்டியானது ஆன்லைனில் அரபு மற்றும் ஆங்கிலத்தில் கிடைப்பதாகவும், இது பிளாஸ்டிக் பை தடையைப் பற்றி நுகர்வோர் மற்றும் வணிகங்கள் கேட்கக்கூடிய முக்கியமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் எனவும் முனிசிபாலிட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையானதாக இருப்பது எப்படி என்பதற்கான உதவிக்குறிப்புகளுடன், பிளாஸ்டிக்கிற்கான பசுமையான மாற்றுகளையும் இது எடுத்துக்காட்டுவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து துபாய் முனிசிபாலிட்டியின் கழிவு உத்தி மற்றும் திட்டத் துறையின் (Waste Strategy and Projects Department) தலைவர் முகமது அல்ரயீஸ் (Mohammed Alrayees) கூறியதாவது: “எல்லா தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நிலையான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான எங்கள் ஆதரவின் அடிப்படையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் பசுமை மாற்றுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க இந்த விரிவான வழிகாட்டி தொடங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!