UAE: மார்ச் மாதத்தின் கடைசி 10 நாட்களில் மீண்டும் மழை பெய்யும்.. மிதமான வெப்பநிலை நிலவும்.. புயல் மையம் தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில வாரங்களாக துபாய், அபுதாபி, ஷார்ஜா உட்பட அனைத்து எமிரேட்களிலும் கனமழை பெய்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வெப்பநிலை கணிசமாகக் குறைந்து காணப்பட்டது. இதனால் அமீரக குடியிருப்பாளர்கள் இதமான வானிலையை நாள் முழுவதும் அனுபவித்து வந்தார்கள்.
ஆனால், தற்பொழுது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலையானது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதால், மீண்டும் மழை பெய்து வெப்பம் தணியுமா என்று குடியிருப்பாளர்கள் பலரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், அமீரகத்தின் புயல் மையம் (Storm Centre) இந்த மாதத்தில் எதிர்பார்க்கப்படும் மழைக்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மார்ச் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் நாட்டில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படும் பகுதிகளைக் குறிக்கும் வரைபடத்தையும் புயல் மையம் பகிர்ந்துள்ளது.
புயல் மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின் படி, கடலோரப் பகுதிகளில் 10 மிமீ முதல் 40 மிமீ வரையிலான லேசான மழையையும், நாட்டின் உள் பகுதிகளில் 50 மிமீ முதல் 80 மிமீ வரையிலான கனமழையையும் எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், அபுதாபியில் வசிப்பவர்கள் மழைப்பொழிவின் பல்வேறு தீவிரத்தை எதிர்பார்க்கலாம், குறிப்பாக கடலோரப் பகுதிகளில் மொத்தம் 10 மிமீ முதல் 20 மிமீ வரையிலும், உள் பகுதிகளில் 25 மிமீ முதல் 50 மிமீ வரையிலும் மழை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துபாய் மற்றும் ஷார்ஜாவின் கடலோரப் பகுதிகளிலும் 15 மிமீ முதல் 50 மிமீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையமும் (NCM) வரும் நாட்களில் குடியிருப்பாளர்கள் வானிலைக்கு ஏற்ப முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel