ஈத் விடுமுறையை முன்னிட்டு இலவச பார்க்கிங்கை அறிவித்த துபாய் மற்றும் ஷார்ஜா.. எத்தனை நாட்கள்..??
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஒரு வார கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய எமிரேட்கள் இலவச பார்க்கிங், நீட்டிக்கப்பட்ட போக்குவரத்து சேவை போன்றவற்றை அறிவித்துள்ளன.
துபாய்
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, குடியிருப்பாளர்கள் எமிரேட்டில் உள்ள மல்டி லெவல் பார்க்கிங் டெர்மினல்கள் தவிர அனைத்து பொது பார்க்கிங் இடங்களையும் ரமலான் 29 (ஏப்ரல் 8 திங்கட்கிழமை) முதல் ஷவ்வால் 3 வரை இலவசமாக அணுகலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் மீண்டும் கட்டணங்கள் ஷவ்வால் 4 ஆம் தேதி வசூலிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏப்ரல் 7, ஞாயிற்றுக்கிழமை வழக்கமான நோ-பே பார்க்கிங் நாள் (no-pay parking) என்பதால், வாகன ஓட்டிகள் ஐந்து நாட்கள் வரை இலவச பார்க்கிங்கை அனுபவிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. அதாவது, ஏப்ரல் 8 ஆம் தேதி பிறை தென்பட்டால் மேற்கூறிய படி ஷவ்வால் 3, ஏப்ரல் 11 வரை பார்க்கிங்கை இலவசமாக அணுகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை, பிறை தென்படவில்லை என்றால், ரமலான் மாதம் 30 நாட்கள் நீடிக்கும். அதாவது ஈத் அல் ஃபித்ரின் முதல் நாளான ஷவ்வால் 1 ஏப்ரல் 10, புதன்கிழமையன்று தொடங்கும் என்பதால், ஏப்ரல் 12, வெள்ளிக்கிழமை வரை ஆறு நாட்களுக்கு இலவசமாக பார்க்கிங்கை அணுகலாம். அதன்பிறகு, ஏப்ரல் 13 சனிக்கிழமையன்று கட்டணம் மீண்டும் வசூலிகப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஷார்ஜா:
துபாயைப் போலவே, ஷார்ஜாவிலும் ஈத் அல் ஃபித்ரின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் பொது பார்க்கிங் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நீல நிற அடையாள பலகைகள் கொண்ட பார்க்கிங் மண்டலங்களில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த இடங்கள் வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும் கட்டணத்திற்கு உட்பட்டதாகும்.
ஷார்ஜா சிட்டி முனிசிபாலிட்டியின் இயக்குனர் ஜெனரல் ஓபைத் சயீத் அல் துனைஜி (Obaid Saeed Al Tunaiji) ஈத் விடுமுறை நாட்களுக்கான எமிரேட்டின் ஏற்பாடுகள் பற்றிய விளக்கத்தை அளித்தபோது, இந்த இலவச பார்க்கிங் நேரத்தை உறுதி செய்தார்.
அதேசமயம், பண்டிகைக் காலம் முழுவதும் விதிமீறல்களைக் கண்டறிய பார்க்கிங் இன்ஸ்பெக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், ஈத் தொழுகை அரங்குகளைப் பாதுகாப்பதற்கும், வழிபாட்டாளர்களுக்கு போதுமான வாகன நிறுத்துமிடத்தை உறுதி செய்வதற்கும் சிறப்புக் குழுக்கள் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பார்க்கிங் மீறல்கள்:
- ஒன்றுக்கும் மேற்பட்ட வாகன நிறுத்துமிடத்தை எடுத்துக்கொள்வது
- வாகனங்களின் பின்னால் சீரற்ற முறையில் நிறுத்துதல்
- போக்குவரத்துக்கு இடையூறாக பார்க்கிங் செய்வது
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel