அமீரகத்தில் நிலவும் நிலையற்ற வானிலை.. பயணிகளுக்கு துபாய் ஏர்போர்ட் வெளியிட்டுள்ள அப்டேட்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வார தொடக்கத்தில் நாடு முழுவதும் சீரற்ற வானிலை நிலவும் என்று முன்னறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) பயணிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக துபாய் ஏர்போர்ட் தனது X தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடியிருப்பாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் தங்கள் விமான நிறுவனங்களுடன் சமீபத்திய அப்டேட்களை சரிபார்க்கவும், தங்கள் விமானத்திற்கு முன் கூட்டியே கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
அமீரகத்தில் ஆங்காங்கே இன்று பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, பயணிகள் விமான நிலையத்திற்கு மெட்ரோவில் பயணம் செய்வதன் மூலம் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதுடன் கடைசி நிமிட பதற்றம் ஏற்படாமல் இருப்பதற்கும் வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, NCM வெளியிட்ட வானிலை அறிக்கையின் படி, நாட்டில் ஏப்ரல் 17 புதன்கிழமை வரை ஏற்ற இறக்கமான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிகாரிகள் புயல்கள், கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க தயாராகி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.