ஷார்ஜாவில் இரவு பகலாக சமூக சேவையாற்றும் இந்தியர்கள்.. மாடிகளில் வசிப்பவர்களுக்கு கயிறு மூலம் உணவு விநியோகம்..!!
அமீரகத்தில் வரலாறு காணாத மழை பெய்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள சமூக சேவையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர்.
அந்த வகையில், ஷார்ஜா எமிரேட்டில் வசிக்கக்கூடிய இந்தியர்கள் ஒன்றாக இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த முந்திர் கல்பகஞ்சேரி என்பவரின் தலைமையிலான 70 தன்னார்வத் தொண்டர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.
அப்பகுதி முழுவதையும் மழை வெள்ளம் ஆக்கிரமித்ததால், தன்னார்வலர்கள் அனைவரும் குடியிருப்பாளர்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதில் முதன்மையான கவனம் செலுத்தி, உணவுப் பாக்கெட்டுகளை விநியோகித்து வருகின்றனர். அந்த பாக்கெட்டுகளில் பிரியாணி, பழங்கள், தின்பண்டங்கள் மற்றும் தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருப்பதாக முந்திர் கூறியுள்ளார்.
மேலும், தேவைப்படும் குடியிருப்பாளர்கள் வாட்ஸ்அப் மூலம் நிவாரணங்களை கோருவதாகவும், தன்னார்வலர்கள் SUV-கார்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்று, குடியிருப்பாளர்களின் வீட்டு வாசலில் நேரடியாக பொருட்களை விநியோகிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவது என்பது தனித்துவமான சவாலாக இருக்கிறது என்று தன்னார்வலர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் சில கட்டிங்களில் லிஃப்ட் வேலை செய்யவில்லை என்பதால் படிக்கட்டில் ஏறிச்செல்ல வேண்டிய நிர்பந்தம் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து தொடர்ந்து பணியாற்றி வரும் தன்னார்வலர்களில் ஒருவரான முஸம்மில் கொண்டநாத் (Muzammil Kondanath) என்பவர் கூறுகையில், “மாடிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு கயிறுகளை பயன்படுத்துவதாகவும், இந்த அணுகுமுறை உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு உதவிகள் சென்றடைவதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், அண்டை வீட்டாரின் ஆதரவையும் உறுதி செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு தன்னார்வலரான முகமது ஷரீஃப், எமிரேட்டில் உள்ள அதிகாரிகள் சுற்றுப்புறங்களில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருவதால், மிகவும் எளிதாக உணவு பாக்கெட்டுகளை வழங்க முடிவதாகத் தெரிவித்துள்ளார்.
ஷார்ஜாவில் மழைநீர் தேங்கி 10 நாட்களுக்கும் மேலாகிய நிலையில், இன்னும் சில இடங்களில் இயல்பு நிலை முழுமையாக திரும்பவில்லை. எனவே, இந்த பகுதிகளில் பல உணவகங்கள் மற்றும் மளிகை கடைகள் மூடப்பட்டுள்ளதால், குடியிருப்பாளர்கள் தினமும் காலையிலும் மாலையிலும் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்காக எங்களுக்காக காத்திருக்கிறார்கள் என்றும் ஷரீஃப் கூறியுள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்திருந்த மழைவெள்ளத்தால் உடல்நல பாதிப்பு, மனச்சோர்வு போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், தன்னார்வலர்கள் தேவைப்படுபவர்களுக்கு உதவிகளை வழங்குவதில் உறுதியாக உள்ளனர் என்பது மிகவும் பாராட்டக்கூடிய விசயமாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel