அமீரகத்தில் வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு..!! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்பாடு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம், அரேபிய கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகுவதைக் கண்காணித்ததால், இதன் காரணமாக இந்த வாரம் நாட்டின் சில கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சில கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் மற்றும் கடல் நீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஐக்கிய அரபு அமீரகம் தற்போது, வெப்பமண்டல காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தினால் ஏற்படும் தாக்கங்களை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து NCM விடுத்துள்ள வானிலை எச்சரிக்கை மற்றும் நாட்டில் பதிவான சமீபத்திய மழைப்பொழிவுக்கு பதிலளிக்கும் விதமாக, தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.
முக்கியமாக, அரபிக் கடலில் உருவாகிவரும் மோசமான வானிலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக ‘Joint Assessment Team’ என்கிற குழுவுடன் கூட்டத்தை அவர்கள் கூட்டியதாகவும், நாட்டின் தயார்நிலை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இந்த சந்திப்பின் போது, கடுமையான வானிலையின் போது ஏற்படும் எந்த பாதிப்புகளையும் அவற்றின் பாதை மற்றும் போக்குகளை கண்காணிப்பதன் மூலம் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான தயார்நிலையை மேம்படுத்துவதற்கான வழிகளையும் அதிகாரிகள் மதிப்பாய்வு செய்துள்ளனர்.
நாட்டில் மோசமான வானிலை ஏற்படும்பட்சத்தில், அதிகாரிகள் அமீரகத்தின் அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைத் தெரிவிப்பார்கள் என்றும், குடிமக்களும் குடியிருப்பாளர்களும் வானிலை அறிக்கைகள் குறித்து புதுப்பித்த நிலையில் இருக்குமாறும், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆலோசனைகளை கடைபிடிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை, ஆலங்கட்டி மழை மற்றும் பள்ளத்தாக்குகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவின் மேற்கு கடற்கரைக்கு அருகில் அரபிக்கடலுக்கு தெற்கே உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து NCM குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது. இது மத்திய அரபிக்கடலை நோக்கி நகர்ந்து அக்டோபர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ஆழமடையும் என்றும் கணித்துள்ளது.
அமீரகம் மட்டுமின்றி சவூதி, ஓமான் ஆகிய அண்டை நாடுகளிலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகின்றது. மேலும் கடலில் உருவாகும் வெப்பமண்டல காற்றழுத்தத்தை அடுத்து, ஓமனின் தேசிய அவசரநிலை மேலாண்மைக் குழு, தெற்கு அல் ஷர்கியா, அல் வுஸ்தா மற்றும் தோஃபர் ஆகிய மாகாணங்களில் உள்ள துறைகள் மற்றும் துணைக் குழுக்களுடன் இணைந்து தேசிய அவசரநிலை மேலாண்மை மையத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. வானிலை துறையின் படி, வெப்பமண்டல நிலைமைகள் இந்த பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து தகவல்களைப் பெறவும் குழு வலியுறுத்தியுள்ளது.
பொதுவாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘அல் வஸ்மி’ எனப்படும் மழைக்காலம் அக்டோபர் மாதம் நடுப்பகுதியில் தொடங்கி டிசம்பர் 6 வரை நீடிக்கும் என கூறப்படுகின்றது. குறிப்பாக, நாட்டின் கிழக்குப் பகுதிகளில் இம்முறை மழை பொழிவது இயல்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel