அமீரக செய்திகள்

அமீரகத்தில் பிரபலமாகும் ‘க்ரூஸ் கப்பல் சுற்றுலா’..!! ஓமன், கத்தாரை சுற்றிப்பார்க்க சிறந்த வாய்ப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வரலாற்று தளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பாரம்பரிய சுற்றுப்புறங்கள் சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்கின்ற நிலையில், தற்பொழுது நாட்டில் கப்பல் சுற்றுலாவும் பிரபலமடைந்து வருகிறது. ‘Resort World One’ என்ற க்ரூஸ் கப்பல், வார நாட்களில் ஓமன் மற்றும் கத்தாருக்கும், வார இறுதி நாட்களில் சர் பானி யாஸ் ஐலேண்ட்க்கும் இயக்கப்படுகிறது.

இந்த கப்பல் பயணத்திற்கான விலை தோராயமாக 2,800 திர்ஹம்சில் இருந்து தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த கப்பல் வெள்ளிக்கிழமை புறப்பட்டு இரண்டு இரவு நேர பயணத்துடன் ‘சர் பனியாஸ் ஐலேண்டிற்கும் (sir bani island)’, ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு மூன்று இரவு நேர பயணத்துடன் ஓமன் நாட்டிற்கும், இரண்டு இரவு நேர பயணத்துடன் கத்தார் நாட்டிற்கும் பயணிகளுக்கு கப்பல் சேவை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, நான்கு, ஐந்து அல்லது ஏழு இரவு பயணத்தை மேற்கொள்ளவும், ஏதேனும் பயணத்திட்டங்களை இணைக்கவும் தேர்வு செய்ய பயணிகளுக்கு விருப்பம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த கப்பலில் ஒரு நாளைக்கு ஆறு வேளை உணவு, நடன விருந்துகள், நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் என பயணிகளுக்கு இடைவிடாத பொழுதுபோக்குகள் வழங்கப்படுவதாவும் கூறப்படுகிறது.

இத்தகைய பயண அனுபவத்தால் கப்பல் சுற்றுலா அமீரகத்தில் பிரபலமடைந்து வருவதாகவும், நள்ளிரவில் பால்கனியில் காபியுடன் அமர்ந்து வானத்தையும் கடலையும் பார்ப்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம், இது மிகவும் புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக இருக்கும் என்றும் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் மூத்த துணைத் தலைவர் நரேஷ் ராவல் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், இது ஒரு வித்தியாசமான விடுமுறை அனுபவம் என்று அவர் கூறியதுடன், கப்பலில் உள்ள சேவைகளும் சிறந்தவை என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பயணிகளுக்கு கப்பலில் வழங்கப்படும் வசதிகளும் இந்த கப்பல் சுற்றுலா பிரபலமாவதற்கு முக்கிய காரணம் என்றும் நரேஷ் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் ஓமனுக்கு விமானத்தில் செல்ல வேண்டுமானால், நீங்கள் பேக் செய்து, பல மணிநேரம் முன்னதாக விமான நிலையத்திற்குச் சென்று, விமானத்தில் அங்கு சென்று, விமான நிலைய நடைமுறைகளை முடித்து, திரும்பும்போது மீண்டும் அதே காரியத்தைச் செய்ய வேண்டும். இங்கே, நீங்கள் சுகமாக தூங்கும்போது அல்லது முழு நாள் பொழுதுபோக்கை அனுபவிக்கும் போது நாங்கள் உங்களை ஓமனுக்கு அழைத்துச் செல்கிறோம்” என்று எடுத்துரைத்துள்ளார்.

சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தைவான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்துவதில் பங்காற்றிய இந்நிறுவனம் மத்திய கிழக்கு நாடுகளில் சேவையை வழங்குவது இதுவே முதல் முறை. புதிய துறைமுகங்களை உருவாக்குவதில் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்த நரேஷ் அடுத்த 6 மாதங்களில், கப்பலின் சொந்த துறைமுகம் துபாயாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், பயணத்திற்காக இங்கு வர சீனா, சிங்கப்பூர், தைவான், மலேசியா போன்ற  நாடுகளில் உள்ள சர்வதேச வாடிக்கையாளர்களிடமிருந்து நிறைய முன்பதிவுகள் உள்ளதாகவும், வருபவர்கள் அனைவரும் கூடுதல் சில நாட்கள் தங்கி, நாட்டின் பொருளாதாரத்திற்கு கூடுதல் வருமானம் கொடுத்து ஆதரவளிப்பார்கள் என்று தெரிவித்ததுடன், ரஷ்யா, இந்தியா மற்றும் CIS சந்தைகளில் இருந்து நிறைய வாடிக்கையாளர்கள் தங்களுக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!