அமீரக செய்திகள்

துபாயில் இந்த 4 கடற்கரைகளுக்கு குடும்பங்களுக்கு மட்டுமே அனுமதி.. தேசிய தின விடுமுறையை முன்னிட்டு அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகம் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி அதன் 53வது தேசிய தினத்தைக் கொண்டாட உள்ள நிலையில், நாட்டில் உள்ள குடியிருப்பாளர்கள் அனைவரும் நீண்ட வார விடுமுறையை அனுபவிக்க உள்ளனர். இந்த ஆண்டு முதல் ஈத் அல் எதிஹாத் என்று அழைக்கப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு, தனியார் மற்றும் பொதுத் துறைகளின் ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு நாட்கள் தேசிய தின விடுமுறையின் போது, துபாயில் உள்ள நான்கு பொது கடற்கரைகள் குடும்பங்களுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, எதிர்வரும் நவம்பர் 30ஆம் தேதி  முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை, துபாயில் உள்ள ஜுமேரா பீச் 2, ஜுமேரா 3, உம் சுகீம் 1 மற்றும் உம் சுகீம் 2 ஆகிய நான்கு பொது கடற்கரைகளும் குடும்பத்திற்கு மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

துபாய் முனிசிபாலிட்டியின் பொது கடற்கரைகள் மற்றும் நீர்வழித் துறையின் இயக்குநர் இப்ராஹிம் முகமது ஜுமா அவர்கள் பேசிய போது, ஈத் அல் எதிஹாத் பண்டிகையின் போது துபாயில் உள்ள பொது கடற்கரைகளை குடும்பங்களுக்கு அர்ப்பணிப்பது, கடற்கரைகளுக்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் துபாயின் கடற்கரைகளை குடும்பத்தினருடன் அமைதியாக அனுபவிக்கும் வாய்ப்பை இது வழங்குகிறது. அதுமட்டுமில்லாமல், துபாய் முனிசிபாலிட்டி 135 பணியாளர்களைக் கொண்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவை நியமித்துள்ளது.

கூடுதலாக, விடுமுறை காலம் முழுவதும் கடற்கரை செயல்பாடுகளை மேற்பார்வையிட 60 பேர் கொண்ட கள மேற்பார்வை குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அதன் கூட்டாளர்களுடன் இணைந்து, குடிமை அமைப்பு அனைத்து கடற்கரை செயல்பாடுகளையும் உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!