துபாய்: இம்மாத இறுதியில் இருந்து செயல்பாட்டிற்கு வரும் 2 புதிய டோல் கேட்கள்..!! தேதியை அறிவித்த சாலிக்..!!

துபாயின் அல் கைல் சாலையில் உள்ள பிசினஸ் பே கிராஸிங், அல் மேதான் ஸ்ட்ரீட் மற்றும் உம் அல் ஷீஃப் ஸ்ட்ரீட்டிற்கு இடையே ஷேக் சையத் சாலையில் அல் சஃபா சவுத் ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 சாலிக் கேட்கள் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி முதல் செயல்படும் என்று டோல் ஆப்பரேட்டரான சாலிக் PJSC அறிவித்துள்ளது. இந்த இரண்டு புதிய டோல் கேட்கள் திறக்கப்பட்டால், துபாயில் உள்ள சாலிக் கேட்களின் எண்ணிக்கை எட்டிலிருந்து பத்தாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷார்ஜா, அல் நஹ்தா, அல் குசைஸ் ஆகிய இடங்களில் இருந்து வரும் ஏராளமான வாகன ஓட்டிகள் இந்த பாலத்தை பயன்படுத்தி அல் கைல் சாலையை அணுகுவதால் பிசினஸ் பே எமிரேட்டின் பரபரப்பான சாலைகளில் ஒன்றாக உள்ளது.
இது குறித்து சாலிக் நிறுவனத்தின் CEO இப்ராஹிம் அல் ஹடாத் அவர்கள் நேர்காணல் ஒன்றில் பேசிய போது, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலிக் டோல் கேட்கள் அந்தப் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை 16 சதவீதம் வரை குறைக்கும் என்று கூறியுள்ளார்.
பிசினஸ் பே கிராசிங் கேட்:
- அல் கைல் சாலையில் 12 முதல் 15 சதவீதம் நெரிசல் குறைக்கப்படும்
- அல் ரபாத் தெருவில் 10 முதல் 16 சதவீதம் குறையும்
அல் சஃபா சவுத் கேட்:
- ஷேக் சையத் சாலையிலிருந்து மேதான் ஸ்ட்ரீட் வரை வலதுபுறம் திரும்பும் போக்குவரத்து அளவு 15 சதவீதம் குறையும்
- ஃபைனான்சியல் சென்டர் ஸ்ட்ரீட் மற்றும் மேதான் ஸ்ட்ரீட் இடையே போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தும்
- அகலமான ஃபஸ்ட் அல் கைல் ஸ்ட்ரீட் மற்றும் அல் அசயேல் ஸ்ட்ரீட்டிற்கு போக்குவரத்தை மறுபகிர்வு செய்யும்
அல் சஃபா சவுத் கேட் என்பது தற்போதுள்ள வடக்கு அல் சஃபா வாயிலுடன் இணைக்கப்பட்ட தொழில்நுட்ப தீர்வு என்று அல் ஹதாத் குறிப்பிட்டார். அதாவது, ஒரு மணி நேரத்திற்குள் வடக்கு மற்றும் தெற்கு சஃபா வாயில்கள் வழியாகச் செல்பவர்களுக்கு ஒரே ஒரு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்பதை விளக்கினார்.
அதுமட்டுமில்லாமல், புதிய டோல் கேட்கள் இரண்டும் கிட்டத்தட்ட 100 சதவிகிதம் சூரிய சக்தியில் இயங்கும் என்பதை முன்னிலைப்படுத்துவதில் மகிழ்ச்சியடைவதாகவும், இது துபாயின் இலக்குகள் மற்றும் பசுமை ஆற்றலுக்கான சாலிக் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் இணைந்த நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டோல் கட்டணம் உயர்த்தப்படுமா?
கடந்த மாத தொடக்கத்தில், எமிரேட்டில் உள்ள அனைத்து டோல் கேட்களுக்கும் டைனமிக் விலையை அமல்படுத்துவது குறித்து சமூக ஊடகங்களில் வைரலான இடுகைக்கு சாலிக் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவில், நவம்பர் பிற்பகுதியில் இரண்டு புதிய சாலிக் வாயில்கள் செயல்படத் தொடங்கும் போது, மறைமுகமாக நடைமுறைக்கு வரும், ஆஃப் மற்றும் பீக் ஹவர்ஸின் அடிப்படையில் இலவசம் முதல் 8 திர்ஹம்ஸ் வரை கட்டணம் கணக்கிடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் முற்றிலும் தவறானது என்று சாலிக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலிக் கட்டணங்களில் ஏதேனும் சரிசெய்தல் என்பது RTAக்கான முடிவு மற்றும் துபாய் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்பதையும் அல் ஹடாத் எடுத்துரைத்துள்ளார். தற்போது, சாலிக் துபாய் முழுவதும் உள்ள டோல் கேட்களில் ஏதேனும் ஒரு வாகனம் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் 4 திர்ஹம் என்ற நிலையான கட்டணத்தை வசூலிக்கிறது.
கடந்த ஆண்டு, சுமார் 593 மில்லியன் பயணங்கள் சாலிக்கின் டோல் கேட்கள் வழியாக சென்றன. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, எட்டு சாலிக் கேட்கள் வழியாக சுமார் 238.5 மில்லியன் பயணங்கள் சென்றன, இதன் விளைவாக அரையாண்டு வருவாய் 1.1 பில்லியன் திர்ஹம்ஸ் ஆக உயர்ந்தது, இது கடந்த ஆண்டு இதே காலதுடன் ஒப்பிடுகையில் 5.6 சதவீதம் அதிகமாகும்.
துபாயில் மேலும் கூடுதலான டோல் கேட்கள் வருமா?
செய்தி ஊடகங்கள் கூடுதல் டோல் கேட்கள் பற்றி அல் ஹதாத்திடம் கேள்வியெழுப்பிய போது, புதிய டோல் கேட்களுக்கு நிலையான அட்டவணை எதுவும் இல்லை (நவம்பர் 24 அன்று திறக்கப்பட்டவை தவிர) என்று திட்டவட்டமாக தெரிவித்ததுடன், புதிய டோல் கேட் அறிமுகம் என்பது முதன்மையாக போக்குவரத்து மற்றும் நெரிசல் அளவுகள் மற்றும் தொழில்நுட்ப மற்றும் போக்குவரத்து ஆய்வுகளின் முடிவுகளைப் பொறுத்தது என்று கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel