வளைகுடா செய்திகள்

சவுதி அரேபியாவில் ஃபோன் சார்ஜர் தீப்பிடித்ததால் ஏற்பட்ட விபரீதம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி..!!

சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று நாட்களில் திருமணத்திற்கு தயாராகி கொண்டிருந்த பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவூதியின் கிழக்கு மாகாணமான அல்-அஹ்சாவில் கடந்த திங்கட்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் ஆறு சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களது மருமகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், அவர்களுடன் தீ விபத்தில் சிக்கிய அவர்களின் தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு நன்றாக இருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக வெளியான செய்திகளின் படி, ஃபோன் சார்ஜர் வெடித்ததில் அருகிலிருந்த ஒரு சோஃபாவில் தீப்பிடித்து, பின்னர் தீயானது இரண்டு மாடி வீட்டின் கூரையின் அலங்காரங்களுக்கு விரைவாகப் பரவி பெரிய விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேரந்த சவுதி குடிமக்களான ஏழு பேர் உயிரிழந்தது அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூன்று நாட்களில் திருமணமாக இருந்த பெண்ணும் இந்த விபத்தில் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, பொதுவாக ஃபோன் சார்ஜர்களில் தீயை ஏற்படுத்தும் அபாயங்கள் உள்ளன, ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் அரிதானவை மற்றும் பொதுவாக குறிப்பிட்ட சிக்கல்களால் மட்டுமே விளையும் என்று தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தவறான அல்லது சேதமடைந்த சார்ஜர்களைப் பயன்படுத்துதல், அதிக வெப்பமடைதல், முறையற்ற பயன்பாடு அல்லது தொடர்ச்சியாக சார்ஜ் செய்தல் போன்ற அசாதாரண நிகழ்வுகளால் இத்தகைய விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!