அமீரக செய்திகள்

அமீரகத்தில் நமது காரை பொதுவெளியில் நாமே கழுவலாமா? விதிமுறைகள் என்ன.? விரிவான தகவல்கள்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள குடிமை அதிகாரிகள் எமிரேட்டின் தூய்மை மற்றும் அழகைப் பராமரிப்பதில் அவ்வப்போது குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். மேலும், நகர்ப்புறங்களின் தூய்மையைப் பாதுகாப்பதில் குடியிருப்பாளர்களையும் தங்கள் பங்களிப்பை செய்யுமாறு ஊக்குவிக்கிறார்கள்.

அதன்படி, அமீரகத்தின் பெரும்பாலான எமிரேட்டுகளில் ஆங்காங்கே அழுக்கு படிந்த வாகனங்களை விட்டுச் செல்வது, தூசி நிறைந்த கார்களை நியமிக்கப்படாத பகுதிகளில் கழுவுவது போன்ற நடத்தைகளுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. ஆம், அமீரகத்தின் சில நகரங்களில், வீடுகளுக்கு வெளியேயோ அல்லது கட்டிடங்களுக்கு முன்பாகவோ, குறிப்பிடப்படாத பகுதிகளில் கார்களைக் கழுவுவது தடை செய்யப்பட்டுள்ளது. தெருக்கள், வாகன நிறுத்துமிடங்கள், பூங்காக்கள் மற்றும் பிற சமூகப் பகுதிகள் உட்பட அனைத்து பொது இடங்களுக்கும் இது பொருந்தும்.

நகர்ப்புறங்களின் தூய்மையைப் பாதுகாக்கும் அதே வேளையில், நீர் வீணாவதைத் தடுப்பது மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுப்பதும் இந்தக் கொள்கையின் நோக்கமாகும். எனவே, நியமிக்கப்பட்ட கார் கழுவும் வசதிகள் கொண்ட நிலையங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் உள்ள கார் கழுவும் மையம் ஆகிய இடங்களில் மட்டுமே காரினை கழுவ அனுமதிக்கப்படுகிறது.

நீர் பயன்பாடு கட்டுப்படுத்தப்படுவதையும், காரை கழுவும்போது படியும் கழிவுகள் முறையாக நிர்வகிக்கப்படுவதையும் உறுதிசெய்யும் வகையில், இந்த செயல்முறையை பொறுப்புடன் கையாள குறிப்பிட்ட இந்த இடங்கள் மட்டுமே கார் கழுவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளன.

பொது இடங்களில் காரை கழுவினால் அபராதம் விதிக்கப்படுமா?

அமீரகத்தில் காரை பொது இடங்களில் கழுவுவது சட்டவிரோதமானது மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். குறிப்பாக, துபாய் மற்றும் அபுதாபியில் வசிப்பவர்கள் தங்கள் வாகனங்களை தெருக்கள், பார்க்கிங் பகுதிகள் அல்லது பொது இடங்களில் கழுவினால் 500 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.

இருப்பினும், வில்லாவில் வசிக்கும் குடயிருப்பாளர்கள் தங்களின் வாகனங்களை கழுவ அனுமதிக்கப்படுகிறார்கள். அதாவது வில்லா காம்பவுண்ட் வளாகத்திற்குள் இருந்தால், மற்றும் கழுவுவதற்குப் பயன்படுத்தப்படும் தண்ணீர் பொது இடங்களில் சிந்தாமல் அல்லது தெறிக்காமல் இருந்தால், உங்கள் காரைக் கழுவ உங்களுக்கு அனுமதி உண்டு.

ஆனால், பல பேர் வசிக்கும் ஒரு சமூக வில்லாவில் காரைக் கழுவினால், தெருக்களில் அல்லது பொதுவான பகுதிகளில் தண்ணீர் வெளியேறினால், அபராதங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நீர் ஓட்டம் அடிக்கடி நடைபாதைகளில் தேங்கும் போதும், வடிகால் அமைப்புகள் நிரம்பி வழியும் போதும் மற்றும் அருகிலுள்ள குளங்கள் மற்றும் ஏரிகளில் கழுவும் போதும் மாசு்பாட்டிற்கு இது வழிவகுக்கிறது. இது அடிக்கடி சுத்தம் மற்றும் பராமரிப்பு முயற்சிகளின் தேவையை உருவாக்குகிறது.

அதுமட்டுமில்லாமல், சில சந்தர்ப்பங்களில், குடியிருப்பாளர்கள் கவனக்குறைவாக துப்புரவுப் பொருட்கள் அல்லது இரசாயனங்களைப் பயன்படுத்தி கழுவுதால், அசுத்தமான நீர் நடைபாதை பகுதிகளில் தேங்கிவிடுவது, பராமரிப்பு செலவுகளை அதிகரிக்கும். எனவே, இந்த விதிகளை மீறும் குடியிருப்பாளர்கள், மீறல் நோட்டீஸ் (NOV) பெறுவார்கள் மேலும் அவர்களுக்கு 500 திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்படலாம்.

அழுக்கு படிந்த கார்களின் உரிமையாளர்களுக்கு அபராதம்

துபாயில், அழுக்கு படிந்த அல்லது ஒழுங்கற்ற கார்களை பொது இடங்களில் விட்டுச் செல்லும் வாகன உரிமையாளர்களுக்கு நகரின் சிவில் அதிகாரிகளால் 500 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். கழுவப்படாத வாகனங்களை நீண்ட நேரம் பொது வாகன நிறுத்துமிடங்களில் விடுவதால், நகரின் தூய்மை பாதிக்கப்படுவது மட்டுமின்றி, நகரின் அழகியல் தோற்றத்தையும் அது கெடுக்கிறது.

அபுதாபியில் சாலையோரங்களில் அல்லது பொது இடங்களில் அழுக்கு வாகனங்களை கவனிக்காமல் விடுவது போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாகும். நகர அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கைகளுக்கு கடுமையான அபராதங்களை விதிக்கின்றனர், மேலும் வாகன ஓட்டிகளுக்கு 3,000 திர்ஹம்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம். இதுபோன்ற குற்றங்களுக்காக குடிமை அமைப்பு அந்த வாகனங்களையும் பறிமுதல் செய்யலாம்.

ஷார்ஜாவில், பொதுத் தெருக்களில் அல்லது குடியிருப்புப் பகுதிகளில் தங்கள் வாகனங்களைச் சுத்தம் செய்வதற்காக சட்டவிரோத கார் கழுவுபவர்களை வாடகைக்கு எடுக்கும் கார் உரிமையாளர்களுக்கு 250 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். இதேபோல், அங்கீகரிக்கப்படாத கார் கழுவுபவர்களுக்கு 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படுகிறது.

பொதுவாக, கார் கழுவுவதால் தேங்கி நிற்கும் அழுக்கு நீர் நோய்களை உருவாக்குவதுடன் சுற்றுப்புறத்தை துர்நாற்றம் செய்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, குடியிருப்பாளர்கள் நீண்ட காலத்திற்கு வெளிநாடு செல்லும்போது, ​​அங்கீகரிக்கப்பட்ட தனியார் வாகன நிறுத்துமிடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்துவது நல்லது.

மேலும், உரிமையாளர் திரும்பி வரும் வரை வாகனத்தின் தூய்மை மற்றும் பராமரிப்பை பராமரிப்பதற்கு இந்த வசதிகள் பொறுப்பாகும். இது கார் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது மற்றும் பொது இடங்களின் சீரழிவுக்கு பங்களிக்காது என்று அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!