துபாய்: மால் ஆஃப் எமிரேட்ஸில் பேரியர் நீக்கம்.. புதிய பார்க்கிங் முறை செயல்படுத்தப்பட்டதா?

கடந்த ஆண்டு அக்டோபரில் துபாயில் அறிவிக்கப்பட்ட புதிய கட்டண பார்க்கிங் முறையானது, சிட்டி சென்டர் தேரா மற்றும் சிட்டி சென்டர் மிர்டிஃப் மற்றும் மால் ஆஃப் தி எமிரேட்ஸ் ஆகிய மூன்று மால்களில் செயல்படுத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில் நடப்பு ஆண்டு ஜனவரி 1 முதல் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், பார்க்கின் நிறுவனம், டெவலப்பர் மஜித் அல் ஃபுத்தைம் (MAF) ப்ராப்பர்ட்டிஸ் ஆகியவை ஒன்றிணைந்து வழங்கக்கூடிய இந்த புதிய பார்க்கிங் சிஸ்டம் எப்போது தொடங்கும் என்று அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் துபாயில் உள்ள மால் ஆஃப் எமிரேட்ஸ் ஷாப்பிங் மாலில் புதிய ‘பேரியர்லெஸ் பார்க்கிங்’ (barrierless parking) முறையை செயல்படுத்துவதற்காக பார்க்கிங் தடைகள் அகற்றப்பட்டு, சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த அமைப்பானது மற்ற இரண்டு மால்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மால்கள் பதிவுசெய்யும் 20 மில்லியனுக்கும் அதிகமான கார்களுக்கான அணுகலை இந்த தடையற்ற பார்க்கிங் அமைப்பு (barrierless parking system) எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த மூன்று ஷாப்பிங் மையங்களிலும் மொத்தம் 21,000 பார்க்கிங் இடங்கள் உள்ளன.
‘பேரியர்லெஸ் பார்க்கிங்’ அமைப்பு எவ்வாறு செயல்படும்?
பார்க்கின் நிறுவனம், டெவலப்பர் மஜித் அல் ஃபுத்தைம் (MAF) ப்ராப்பர்ட்டிஸ் உடன் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் இணைந்து, துபாய் எமிரேட்டில் உள்ள மூன்று பிரபலமான மால்களிலும் தடை இல்லாத பார்க்கிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. பார்க்கின் அறிமுகப்படுத்தவுள்ள தடையற்ற பார்க்கிங் தொழில்நுட்பமானது, மாலுக்கு வரும் பார்வையாளர்கள் வாகன நிறுத்துமிடங்களுக்குள் நுழையும் போதும் அல்லது வெளியேறும் போதும் கட்டணத்தைச் செலுத்த தடைகளில் நின்று காத்திருக்க வேண்டிய தேவையை (barrierless parking) நீக்குகிறது.
அதாவது புதிய பார்க்கிங் அமைப்பில் இருக்கும் மேம்பட்ட கேமராக்கள் தானாகவே வாகனங்களின் உரிமத் தகடுகளைப் (license plates) படம்பிடித்து, ஒவ்வொரு வாகனத்தின் முன்னேற்றம் மற்றும் தங்கியிருக்கும் கால அளவைக் கண்காணிக்கும். மால்களில் உள்ள பார்க்கிங் பகுதிக்குள் ஓட்டுநர்கள் நுழையும்போது, பார்க்கிங் செலவுகள் குறித்த SMS அல்லது Parkin ஆப் நோட்டிபிகேஷன்களை அவர்கள் பெறுவார்கள். மேலும், பார்வையாளர்கள் எந்தவொரு கட்டணத்தையும் Parkin ஆப் அல்லது இணையதளம் மூலம் செலுத்தலாம்.
எவ்வாறாயினும், பார்க்கிங் கட்டணம் மாறாமல் இருக்கும் என்றும், மூன்று மால்களில் பார்க்கிங் கட்டணம் அப்படியே இருக்கும் என்றும் பார்கின் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான தகவல்களின் படி, மால் ஆஃப் எமிரேட்ஸ் முதல் நான்கு மணிநேரங்களுக்கு தொடர்ந்து இலவசமாகவும், சிட்டி சென்டர் தேரா முதல் மூன்று மணி நேரம் இலவசமாகவும் பார்க்கிங் வசதியை வழங்குகின்றன. இதற்கிடையில், சிட்டி சென்டர் மீர்டிஃப் பார்க்கிங் இலவசமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
MAFஇன் அசெட் மேனேஜ்மென்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி கலீஃபா பின் பிரைக் முன்னதாக செய்தி ஊடகங்களிடம் கூறுகையில் “நீங்கள் எங்கள் கடைகளில் ஒன்றில் பரிவர்த்தனை செய்தால், உங்கள் டிக்கெட்டை சரிபார்த்து கட்டணத்தை தள்ளுபடி செய்வதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த புதிய ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டம் பார்க்கிங் பகுதிகளில் நெரிசலைக் குறைத்து, சுமூகமான போக்குவரத்து ஓட்டத்தை செயல்படுத்துவதுடன், துபாயில் உள்ள சில பரபரப்பான மற்றும் நன்கு அறியப்பட்ட சில்லறை விற்பனை இடங்களில் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் என்று பார்க்கின் நிறுவனத்தின் CEO முகமது அப்துல்லா அல் அலி முன்னதாக உறுதியளித்துள்ளார்.
இந்த புதிய ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டம், துபாயில் முதல் அமைப்பாக இருக்காது. ஏனெனில், துபாய் மாலின் சில பகுதிகளில் கட்டணம் செலுத்தும் பார்க்கிங் சேவைகளுக்கு இதே போன்ற அமைப்பு உள்ளது. இருப்பினும், அந்த வசதி சாலிக் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. எனவே, துபாய் மால் பார்க்கிங் கட்டணம் சாலிக் பயனர் கணக்குகளில் இருந்து தானாகவே கழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel